அமெரிக்கக் குளிர்பான நிறுவனமான கோகோ கோலா அடுத்த 5 வருடத்தில், இந்திய விவசாயத் துறையில் 1.7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.38 ரூபாயாக உள்ள நிலையில், 1.7 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 10,944 கோடி ரூபாய். கிட்டதட்ட 11,000 கோடி ரூபாய்.
ஏற்கனவே தமிழ்நாட்டில், பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் அதிகளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் கோகோ கோலா இப்புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
கோகோ கோலா
இந்நிறுவனம் இந்தியாவில் தனது பாட்டில் தயாரிப்பு, பழங்கள் சப்ளையர்கள், பிராசசர் நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து இந்த முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த முதலீடு தனது வர்த்தகம் முழுவதிலும் இருக்கும் எனவும் கோகோ கோலா இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் அதிகப்படியாகப் பழங்களைக் கொள்முதல் மற்றும் அதன் தொடர்புடைய வர்த்தகத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
800 மில்லியன் டாலர்
கோகோ கோலா நிறுவனம் தற்போது அறிவித்துள்ள 1.7 பில்லியன் டாலர் முதலீட்டில் 800 மில்லியன் டாலர் தொகையை நிறுவனத்தின் ஜூஸ், ஜூஸ் சார்ந்த குளிர்பானங்கள் மற்றும் கர்பனேடெட் குளிர்பானங்களுக்காகத் தேவைப்படும் பழ கூழ் மற்றும் பழச் செறிவு ஆகியவற்றைக் கொள்முதல் செய்யவும் அதற்கான வசதிகளைச் செய்யவும் முதலீடு செய்யப்பட உள்ளது.
டி கிருஷ்ணகுமார்
குளிர்பான சந்தையில் அனைத்து விதிமானக் குளிர்பானங்களையும் தயாரிக்கும் நாங்கள் விவசாயம் சார்ந்த வர்த்தகத்தில் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டியதை உணர்ந்துள்ளோம். இதன் வாயிலாகவே தற்போது பழ கூழ் மற்றும் பழச் செறிவு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதில் அதிகளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
உள்கட்டமைப்பு வசதிகள்
1.7 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் 800 மில்லியன் டாலர் பழம் சார்ந்த பொருட்களைக் கொள்முதல் செய்ய முதலீடு செய்யப்படும் நிலையில் மீதுமுள்ள தொகை நிறுவனத்தின் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய உள்ளது.
900 மில்லியன் டாலர்
இதன் படி நிறுவனத்தின் உற்பத்தி வரிசை, ஜூஸ்க்கான பாட்டில் தயாரிப்பு ஆலை, பழங்களைப் பதப்படுத்தும் ஆலைகள், உபகரணங்கள் மற்றும் விவசாயத் துறை பொருட்கள் ஆகியவற்றை வாங்க மீதமுள்ள 900 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்த முதலீட்டை இந்தியாவில் கோகோ கோலாவின், பாட்டில் தயாரிக்கும் கூட்டணி நிறுவனமான ஹிந்துஸ்தான் கோகோ கோலா குளிர்பான நிறுவனம், பாட்டில் தாயரிப்பில் இருக்கும் இதர 13 நிறுவனங்கள் மற்றும் பழங்களைப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து முதலீடு செய்ய உள்ளது.
ஏற்றுமதி
இந்த முதலீட்டு மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 44 நாடுகளுக்கு ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் பழ கூழ் மற்றும் பழ செறிவுகளை ஏற்றுமதி செய்யக் கோகோ கோலா முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு 280 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் அடுத்து விவசாயம்
இந்தியாவில் தண்ணீரை எடுத்த உலக நாடுகளில் குளிர்பான வர்த்தகத்தைச் செய்து வரும் கோகோ கோலா நிறுவனம் தற்போகு பழ சந்தையில் (விவசாயம்) இறங்கியுள்ளது. இந்நிறுவனம் அதிகளவில் வெளிநாட்டில் ஏற்றுமதி செய்தால் இந்தியாவில் இதன் விலை அதிகரிக்கும்.
இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கோகோ கோலா தனியாகப் பழங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் இந்தப் பிரச்சனை இருக்காது.