மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஆதார் மற்றும் பாண் கார்டு இணைப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வருமான வரித்ட் துறை இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டுடன் இணைப்புச் செய்யத் தேவையில்லை என்று, இணைப்பைச் செய்யவில்லை என்றாலும் பான் கார்டு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
இப்போது வருமான வரித் துறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மூன்று முக்கிய முடிவுகளைத் தங்களது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
ஆதார் கட்டாயம்
ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு வாங்கும் போதும் ஆதார் எண் கட்டாயம்.
இணைப்பு
ஜூலை 1 ம் தேதி முதல் யாருக்கெல்லாம் பான் கார்டு அளிக்கப்படுகின்றதோ அவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை சமர்ப்பித்துப் பாண் கார்டுடன் இணைக்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு
பான் கார்டு நிராகரிக்கப்பட்டால் வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாது எனவே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று மூத்த வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை படித்துப் பார்த்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.