டெல்லி: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு லாபத்தில் சுமார் 10 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கே இத்தகைய நிலை எனில், இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்களின் நிலை சற்றுக் கேள்விக் குறியாகவே உள்ளது.
லாபம்
சந்தைக் கணிப்புகளில் இந்நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6,203 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்த்த நிலையில் 5,945 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெறும் முதலீட்டாளர்களை ஏமாற்றியது.
வருவாய்
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் 0.2 சதவீதம் வரை சரிந்து 29,584 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இக்காலாண்டில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வின் காரணமாகச் சுமார் 650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான வி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அடுத்தக் காலாண்டில் நம்பிக்கை
இக்காலாண்டில் சந்தையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், டிசிஎஸ் நிறுவனத்தில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது, இதனால் அடுத்த வரும் காலாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார் ராஜேஷ் கோபிநாத்.
வாடிக்கையாளர்கள்
2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 1 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 8 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பீட்டில் சுமார் 12 வாடிக்கையாளர்களையும் புதிதாகப் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை
மேலும் இந்நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்குச் சுமார் 7 ரூபாயை ஈவுத்தொகையாகக் கொடுத்துள்ளது.