2016, நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பணப்புழக்கத்தில் 86 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.
இதன் பின் டிசம்பர் 2வது வாரத்தில் ரிசர்வ் வங்கியே பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் சுமார் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தது, இது மொத்த தொகையில் 81 சதலீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 10க்குப் பின் 200 நாட்கள் ஆன பிறகும் எஞ்சியுள்ள 3 லட்சம் கோடி ரூபாயை எண்ண முடியாமல் தவிக்கிறதாம் ரிசர்வ் வங்கி. இதனைக் காரணம் காட்டி ஜூன் 30 உடன் முடிந்த வாரத்தின் இருப்பு நிலை அறிக்கையை இன்னமும் வெளியிடாமல் உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
தூங்கிக் கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி
32 நாட்களில் 12.44 லட்சம் கோடி ரூபாயைக் கணக்கிட்டு முடிந்த ரிசர்வ் வங்கி 200 நாட்களில் மீதமுள்ள 3 லட்சம் கோடி ரூபாயைக் கணக்கிட முடியவில்லை எனக் கூறுவது நம்ப முடியவில்லை.
இத்தனை நாட்களாக ரிசர்வ் வங்கி தூங்கி கொண்டு இருக்கிறதா என்ற கேள்வியை விட, மக்களை ஏமாற்ற ஏதேனும் முறைகேடான கணக்கீடு செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
உர்ஜித் பட்டேல்
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறுகையில், எஞ்சியுள்ள பணத்தை எண்ணும் பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது, பணிகளை விரைவாக்க புதிய இயந்திரங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது எனக் கடந்த 7 மாதமாகக் கூறிவருகிறார்.
ஆனால் இவருடை விளக்கம் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை.
வரலாறு காணாத பாதிப்பு..
நாட்டில் கருப்புப் பணம், ஊழல், முறைகேடான நிதி ஆகியவற்றை ஒழிக்க வேண்டும், டிஜிட்டல் இந்தியா, ஆதார் எண் கொண்டு பல அதிரடி அறிவிப்புகள் எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி அறிவிக்கப்பட்ட இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. நாட்டின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் பல லட்சம் வேலைவாய்ப்புகளை விழுங்கியது.
இத்தகைய முக்கியமான நடவடிக்கையின் முடிவகளை ரிசர்வ் வங்கி உடனுக்குடன் அறிவிக்க வேண்டியது அவசியம். ஆனால் இதுவரை அறிவிக்காதது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை கணக்கீடு..
பணமதிப்பிழப்புக் காலங்களில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணம் அனைத்திற்கும் சரியான ரசீது அளிக்கப்பட்டும், கள்ள நோட்டுகளை முன் கூட்டியே கண்டறிந்தும், வைப்பு அளவுகளில் அளவீடுகள் விதித்தும், வைப்புக்கான ஆதாரங்களைத் திரட்டியும் பல கணக்கீடுகளுடன் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றப்பட்டுள்ளது.
சில நாட்கள்
இத்தனை கணக்கீடு கொண்டு கணக்கிடப்பட்ட நிலையில், மொத்த பணத்தைக் கணக்குச் செய்வது மிகவும் எளிமையான ஒன்று. இத்தகைய சூழ்நிலையிலும் கடந்த 7 மாதமாக உர்ஜித் பட்டேல் தகவல்களை அறிவிக்கவில்லை.
கள்ள நோட்டுகள்
இந்தத் தாமதத்திற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே தெரிகிறது. இதுவரை வைப்புச் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்புப் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட 12.44 லட்சம் கோடி ரூபாய் விட அதிகமாக இருக்கும் என்பதே தெரிகிறது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரிசர்வ் வங்கி, மிதமிஞ்சியுள்ள பணத்தை எப்படிக் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்பதையே தற்போது ஆலோசனை செய்து வரும் எனச் சந்தேகம் எழுகிறது.
மீண்டும் சந்தையில் கருப்புப் பணம்..
ரிசர்வ் வங்கியிடம் 12.44 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்தால், சந்தையில் மீண்டும் கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது உறுதியாகி விடும்.
எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதே தேவையற்ற ஒன்றாக ஆகிவிடும் என்பதே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவலை. இதனை மறைக்கவே இத்தனை காலம் ஏமாற்றி வருகிறது ரிசர்வ் வங்கி.
கட்டுப்பாடுகள்
பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் கள்ள நோட்டுகளைப் பெற கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே 12.44 லட்சம் கோடி ரூபாயில் 97 சதவீதம் பணம் வங்கிகளின் கைகளில் கிடைத்தது என அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 30... மார்ச் 31..
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30ஆம் தேதியே கடைசி, என்ஆர்ஐகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
என்ஆர்ஐகளின் வாயிலாகச் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் ஜூலை மாதத்திற்குள் கணக்கீடு பணிகள் முடிவடைந்து விடும், ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என உர்ஜித் பட்டேல் உறுதியளித்துள்ளார்.