வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தலைமை அமைப்பு
9 வங்கி யூனியன் மற்றும் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அமைப்புகளுக்குத் தலைமை அமைப்பாக இருக்கும் AIBEA, பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான அறிவிப்பை AIBEA அமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.
முக்கியக் கோரிக்கை
ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் போராட்டம் வங்கிகளைத் தனியார்மயமாக்கம் செய்யக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்படக் கூடாது, மேலும் வங்கிகளில் இருக்கும் வராக்கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக வெங்கடாசலம் தெரிவித்தார்.
10 லட்சம் பேர்
நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
வராக்கடன்
இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
எஸ்பிஐ வங்கி
நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் எஸ்பிஐ கடந்த 5 வருடத்தில் சுமார் 93,041 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது.