விரைவில் பங்கு சந்தையில் இருந்து பங்குகளை வாங்க மற்றும் விற்க ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்படும். இதற்கான பணிகளில் மத்திய அரசும், இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியும் செய்து வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணைப்பினால் கருப்புப் பணம் பங்கு சந்தையில் புழங்குவதைக் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பான் எண் வேலைக்கு உதவாது
மத்திய அரசு நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணால் மட்டும் வரி ஏய்ப்பினை தடுக்க முடியாது என மத்திய அரசு நினைப்பதாகவும் இதனால் தான் ஆதார் கார்டினை நிதி பரிவர்த்தனைகளில் இணைக்கக் கேட்டு வருவதாகவும் இது குறித்து விவரங்கள் அறிந்து இரு அதிகாரிகள் நமக்குத் தெரிவித்தனர்.
செபி
செபி அதிகாரிகள் இது குறித்து அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
எப்போது முதல் அமலுக்கு வரும்?
ஆதார் விரைவில் பங்கு சந்தையில் முதலீடு செய்யக் கட்டாயம் ஆக்கப்படும் ஆனால் அது எப்போது முதல் என்பது மட்டும் இப்போது தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளனர். அதே நேரம் பான் கார்டுக்கு மாற்று வழி ஆதார் கார்டு என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்கின்றனர்.
ஆதார் இணைப்பு
மத்திய அரசு அன்மையில் வங்கி கணக்குகள், பான் எண் உள்ளிட்டவற்றுடன் கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி வருகின்றது. மேலும் மொபைல் சிம் வாங்கும் போது ஏற்கனவே சிம் கார்டுகள் வாங்கியவர்களும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டினை இணைக்க வேண்டும்.
பங்குச் சந்தை சார்ந்த நிதி பரிவர்த்தனைகள்
ஆதார் கார்டு தற்போது வரை பங்கு சந்தைச் சார்ந்த நிதி பரிவர்த்தனைகளுக்குக் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் இதனால் பங்குச் சந்தையில் நடக்கும் மோசடிகளைக் கண்டறிய முடியும் என்று மத்திய அரசு நினைக்கின்றது.
மியூச்சுவல் ஃபண்டு
தற்போது வரை மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் மட்டும் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக ஆதார் கார்டு இணையதளம் மூலம் துவங்கப்படும் கணக்குகளுக்குக் கட்டாயம் ஆக்கியுள்ளது.
பல பான் கார்டுகள்
சில பங்கு சந்தை புரோக்கர்கள் மத்திய அரசிடம் ஆதார் கார்டினை கட்டாயப்படுத்த வேண்டும் என்று செபியின் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பங்கு சந்தையில் உள்ள சில குறைகள் தீரும் எனப் புரோக்கர்கள் நினைக்கின்றனர். மேலும் இதனால் வங்கி கணக்கிற்கு ஒரு பான், பங்கு சந்தை முதலீடுகளுக்கு ஒரு பான் என மோசடி செய்வது குறையும் என்று கூறப்படுகின்றது.
பங்குச் சந்தையில் மோசடி நடைப்பெறுகின்றது
அதே நேரம் இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கூறையும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பங்கு சந்தை புரோக்கர் நிறுவனத்தின தலைமை செயல் அதிகாரி கூறினார். இதனைப் பார்க்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்து மோசடி செய்வது உறுதியாகின்றது.