அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் பல சேவைகளைப் புதிதாக அறிமுகப்படுத்தவும், தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் மட்டும் சுமார் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி
அமேசான் நிறுவனத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,000 வேலைவாய்ப்புகள் அதிகளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைகளில் இருக்கும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சி பணியிடங்கள் அமேசான்.காம், அமேசான்.இன், கருவி வர்த்தகம், அமேசான் கிளவுட் சேவையான அமேசான் வெப் சர்வீசஸ் ஆகிய பிரிவுகளில் இருக்கும்.
அதிக வாய்ப்புகள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1,000 வேலைவாய்ப்புகள் ஒரு தோராய அளவுதான், நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்பத்தில் திறமையான ஆட்கள் கிடைத்தால் கூடுதலான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என அமேசான் கூறியுள்ளது.
5,000 ஊழியர்கள்
அமேசானின் இந்தியா அலுவலகங்களில் சுமார் 5,000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் சுமார் 1,245 காலியான வேலைவாய்ப்புகளைத் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அமேசான் அதிகளவிலான ஊழியர்களை வைத்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 3,41,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
புதிய துறைகள்
ரிசர்ச் சையின்டிஸ்ட், டேட்டா அனலிடிக்ஸ், நேச்சுரல் லேங்வேஜ் பிராசசிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவையே தற்போது அமேசான் முக்கியமாகக் கவனிக்கும் தொழில்நுட்பமாகும்.
அமேசான் வெப் சர்வீசஸ்
இந்நிறுவனத்தின் கிளவுட் சேவையான அமேசான் வெப் சர்வீசஸ்-க்கு இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இப்பிரிவில் மட்டும் சுமநார் 195 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் நகரங்கள் வாரியாகப் பெங்களுரூவில் 557 வேலைவாய்ப்புகள், ஹைதராபாத்தில் 403 வேலைவாய்ப்புகள் சென்னையில் 149 வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளது அமேசான்.
பெங்களுரூ மற்றும் சென்னை
அமேசான் இந்தியாவில் தனது பெரிய அலுவலகத்தைப் பெங்களுரூவில் அமைத்துள்ளது. மேலும் சென்னையில் இருக்கும் அலுவலகத்தில் அமேசானின் கின்டில் மற்றும் பையர் சேவையை விரிவாக்கம் பணிகளைச் செய்து வருகிறது.
ஐடி துறை
இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைச் சத்தமில்லாமல் வெளியேற்றி வரும் நிலையில் அமேசான் இத்துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது.