மும்பை: நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்த 3 நாட்களில் இந்நிறுவனம் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் வர்த்தகச் சந்தையிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது.
கடந்த 3 வர்த்தக நாட்களில் இன்போசிஸ் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் வெளியேற்றப்பட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது.
அப்படி என்ன பட்டியல் அது..?
சந்தை மூலதன மதிப்பு
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பின் படி ஒரு நிறுவனத்தின் மதிப்பீடு செய்து பட்டியலிடப்படும். இப்பட்டியலில் இடம்பெறுவது இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனத்தின் கனவாகும்.
இத்தகைய பட்டியலில் இருந்துதான் தற்போது இன்போசிஸ் வெளியேறியேறுள்ளது.
இழப்பு
விஷால் சிக்கா ராஜினாமாவை அறிவித்து இரண்டு நாள் வர்த்தகத்தில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் சுமார் 30,721.93 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது.
பங்கு மதிப்பு
வியாழக்கிழமை இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1,021.05 ரூபாயாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 876 ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
தூக்கிஎறியப்பட்ட இன்போசிஸ்
இந்நிலையில், சந்தையில் டாப் 10 பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இன்போசிஸ் தற்போது 11 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாகக் குறைக்கும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.
ஒஎன்ஜிசி
இந்நிலையில் சந்தை மதிப்பீட்டின் படி டாப் 10 பட்டியலில் இன்போசிஸ் வெளியேறி பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.
பைபேக் ஆஃபர்
வியாழக்கிழமை இன்போசிஸ் பைபேக் ஆஃபரை அறிவித்தது இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் 4 மாத உயர்வை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விஷால் சிக்கா ராஜினாமாவின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.