சென்னை: இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இணையாக நிறுவனங்கள் மத்தியிலான போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. அதுவும் ஜியோ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இந்தப் போட்டி தொடர்ந்து நீட்டித்தால் 2018ஆம் ஆண்டில் மொபைவ் கட்டணங்களின் அளவு 25-30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் நீங்கள் அதிக இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் கொண்டாட்டம் தான்.
கட்டணங்களின் மாற்றம்...
ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குப் பின்பு சந்தையில் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்கள் சுமார் 25-32 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதுவும் இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவர்கள் மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 60-70 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இவை அனைத்தும் ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குன் பின்னானது. ஜியோவின் சேவை சில இடங்களில் மோசமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்புகள் சந்தையில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
திடீர் விலை குறைப்பு
இலவச சேவை, குறைந்த விலையில் 4ஜி டேட்டா என ஜியோவின் சேவைகள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை அதிகளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் கட்டணங்களை அதிகளவில் குறைந்தது.
இக்கட்டண குறைப்பில் அதிகளவில் ஈடுபட்டது ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தான். ஐடியா வோடபோன் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் உள்ளதால் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் திட்டத்தில் எவ்விதமான அதிகளவிலான கட்டண குறைப்பை அறிவிக்கவில்லை.
விலை போர்
ஜியோவின் அடுத்தடுத்த சேவை அறிமுகத்திற்கு ஏற்ப பிற டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைத்து விலை போரை துவக்கிவைத்தது.
இதனால் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் அதிகளவிலான வருவாய் மற்றும் லாப இழப்புகளைச் சந்தித்தது.
தொடரும் ஜியோ ஆதிக்கம்..
இதனைத் தொடர்ந்து ஜியோ தொடர்ந்து புதுப்புது திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் சேர்த்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோ போனுக்கான ப்ரீபுக்கிங் இன்று துவங்கியுள்ளது.
இதன் மூலம் டெலிகாம் சந்தையில் விலை போர் குறையப்போவதில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
கட்டணம் குறையும்
இந்திய டெலிகாம் சந்தையில் விலை போர் தொடரும் நிலையில், 2018ஆம் ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் சராசரியாக மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 25-32 சதவீதம் வரை குறையும் எனப் பல முன்னணி சந்தை ஆய்வு நிறுவனங்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
மக்கள்
இதுநாள் வரை ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த நிலையில், ஜியோவின் அறிமுகத்தின் மூலம் கட்டணங்கள் குறைந்தது மக்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் ஜியோ தனது சேவையின் தரத்தை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்நிறுவனத்தைத் தோல்வியில் தள்ளப்படும்.


Click it and Unblock the Notifications