இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டாமல் மறைக்கப்படும் பணத்தை வெளியில் கொண்டு வர மத்திய அரசும், வருமான வரித்துறையும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறை தற்போது, வைப்பு நிதி மூலம் அதிக வட்டி வருமானம் பெறும் தனிநபர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் மறைக்கும் கூடுதல் வருமானத்தைக் கணக்கில் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
முக்கிய இலக்கு
இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதி மூலம் அதிகளவிலான வட்டி வருமானத்தைப் பெற்று வருகின்றனர். இதனைப் பல ஆசாமிகள் அரசுக்குத் தெரியாமல் மறைப்பது மட்டும் அல்லாமல் பல சலுகைகளைப் பயன்படுத்திக் கிடைக்கும் வட்டி வருமான தொகைக்கு வரியும் செலுத்தாமல் ஏமாற்றி வருவதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தற்போது முக்கிய இலக்காகக் கொண்டு கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
5 லட்சம் ரூபாய்
வைப்பு நிதியின் மூலம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான வருமானம் பெறும் தனிநபர் மற்றும் மூத்த குடிமக்கள் பலர் தங்களின் வருமானத்தை முழுமையாகக் கணக்கு காட்டுவதில்லை, மேலும் பலர் மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பயன்படுத்தி வரி ஏய்ப்புச் செய்து வருகின்றனர்.
இவர்களைக் குறிவைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுக்கப்போகிறது என மத்திய நேரடி வரி அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முயற்சி
மத்திய அரசு வருமான வரி விதிப்புகள் அளவுகளைத் தளர்த்திய பின்பு, மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் professionals தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கான செலவுகளைச் சரி செய்துகொள்ளப் பல வழிகளில் இருக்கும் வருமானத்தை மறைத்து வருகின்றனர்.
சவாலான வேலை
இத்தகைய ஆசாமிகளைப் பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. உதாரணமாகக் கடந்த வருடம் நடத்திய சோதனை வேட்டையில், பல டாக்டர்கள் அதிகளவிலான பணத்தைக் கையில் வைத்துள்ளனர். இவை அனைத்தும் நோயாளிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் கட்டணம், பல மருத்துவர்கள் இந்தத் தொகையை முழுமையாகக் கணக்கு காட்டுவதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், மழைக்காலத்தில் இவர்களிடம் அதிகளவிலான பணம் சேர்கிறது.
இதனை முழுமையாக மறைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என இந்த உயர் அதிகாரி கூறினார்.
வைப்பு நிதி
இவர்களிடம் குவியும் கூடுதலான பணத்தில் பெரும் பகுதி வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதிக்குச் செல்கிறது. இதில் கிடைக்கப்படும் பெரும் பகுதி பணத்தைக் கணக்கு காட்டப்படுவதில்லை.
பொய் கணக்கு
அப்படிக் கணக்குக் காட்டப்பட்டாலும், முழுமையான தொகைக்குக் காட்டப்படுவதில்லை. 30 சதவீத வரி விதிப்பில் இருக்கும் ஆசாமிகள் வெறும் 10 சதவீத வரி விதிப்பில் இருப்பதாகக் கணக்கு காட்டி ஏமாற்றி வருகின்றனர்.
இதுபோல் பல துறையில் பல வகையில் மோசடி நடந்து வருகிறது. தற்போதையைக் கண்காணிப்பு அனைத்தும் அதிகமாக வரி ஏய்ப்புச் செய்பவர்கள் மட்டுமே.
வரிவாக்கம்
இந்தத் திட்டம் அடுத்த 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வட்டி வருமானம் பெறுவோர் மீதும் விரிவாக்கம் செய்யப்படலாம் எனச் செய்திகள் கிடைத்துள்ளது.