டெல்லி: 200 ரூபாய் நோட்டை வெளியிட்ட மூன்று நாட்களில் திங்கட்கிழமை ஆர்பிஐ வங்கி விரைவில் 1,000 ரூபாய் நோட்டை வெளியிடும் என்று செய்திகள் வெளியாகின. இதனை நாமும் வெளியிட்டு இருந்தோம்.
தற்போது இதற்கு மத்திய அமைச்சகம் மறுப்பு தெரிவித்து டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
1,000 ரூபாய் நோட்டினை மீண்டும் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று பொருளாதாரத் துறை விவகாரங்கள் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் டிவிட் மூலம் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு முழுமையாக நீக்கப்பட்டு 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், தோற்றத்துடன் மீண்டும் 1,000 ரூபாய் நோட்டு வெளிவரக்கூடும் என்று செய்திகள் வெளியானதை அடுத்து இவர் இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார்.
புதிதாக 1,000 ரூபாய் நோட்டு உருவாக்கும் பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி ஒருவர் மூலம் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
ஆகஸ்ட் 25, வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி பிரகாசமான மஞ்சள் நிற 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது. அதே போன்று புதிய 50 ரூபாய் நோட்டினையும் சென்ற வாரம் அறிமுகம் செய்துள்ளது.
ஆர்பிஐ வங்கியின் முன்பு சனிக்கிழமை முதல் புதிய 200 ரூபாய் நோட்டைப் பெற கூட்டம் அலைமோதிவருகின்றது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டை வெளியிட்ட பிறகு இருக்கும் சில்லறை தட்டுப்பாட்டினை குறைப்பதற்காகவே இந்தப் புதிய 200 ரூபாய் நோட்டினை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் தற்போது குறிப்பிட்ட ஆர்பிஐ அலுவலகங்களில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இதன் புழக்கம் வங்கிகள் மூலம் அதிகப்படுத்தப்படும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.