மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ விஷால் சிக்கா மற்றும் முன்னாள் தலைவர் சேஷசாயி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான மிதிப்பு அதிகளவில் குறைந்தது.
இதன் வெளிப்பாடாக இன்போசிஸ் பைபேக் ஆஃபர் அறிவித்தும், இந்நிறுவனப் பங்குகள் மீது செய்திருந்த முதலீட்டை அதிகளவில் குறைந்தனர். இதன் காரணமாக 1,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்குகள் 870 ரூபாய் வரை குறைந்தது.
தற்போது நிலை முழுமையாக மாறியுள்ளது..
நந்தன் நிலகேனி வருகை..
சேஷசாயி வகித்த பதவியில் இன்போசிஸ் நிர்வாகம், இதன் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி அவர்களை நியமித்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தொடர் வளர்ச்சி
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மோசமான வர்த்தகத்தைச் சந்தித்தாலும், இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 940 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.
7,000 கோடி ரூபாய்
விஷால் சிக்கா ராஜினாமாவிற்குப் பின் தொடர்ந்து சரிந்து வந்த இன்போசிஸ் பங்கு மதிப்பு நந்தன் நியமனத்திற்குப் பின் உயர்ந்தது. இதன் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வர்த்தகத்தில் 2.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இன்போசிஸ் சந்தை மதிப்பு, திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
இதன் மூலம் 4 நாட்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 7,000 கோடி ரூபாய் வரை உயர்ந்து அசத்தியுள்ளது.
10 சதவீத சரிவு
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தி பின்பு இந்நிறுவன பங்குகள் சுமார் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.
வந்தனா சிக்கா
விஷால் சிக்காவை தொடர்ந்து, அமெரிக்காவில் இருக்கும் இன்போசிஸ் பவுண்டேஷன் என்னும் அறப்பணி செய்யும் அமைப்பின் தலைவராக இருக்கும் விஷால் சிக்காவின் மனைவி வந்தனா சிக்காவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாராயணமூர்த்தி
நேற்று வரை நாராயணமூர்த்தி விஷால் சிக்கா மற்றும் சேஷசாயி ஆகியோர் குறித்துப் பல குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த நிலையில், புதன்கிழமை காலையில் நந்தன் வந்துள்ளதால் இனி நான் நிம்மதியாகத் தூங்குவேன் எனத் தனது எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிகிறது.