இந்திய பங்குச்சந்தையில் எப்போதுமில்லாத அளவிற்கு இந்த வருடம் ஐபிஓ எண்ணிக்கை அதிகமாக இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்காக வரன் தேடும் இணைய சேவை அளிக்கும் Matrimony.com நிறுவனம் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் களமிறங்க உள்ளது.
ஐபிஓ
பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் முன்னணி பிராண்டான Matrimony.com பங்குச்சந்தையில் இறங்குவதற்காக ஜூலை மாதத்தில் செபி ஒப்புதல் அளித்தது.
500 கோடி ரூபாய்
இந்த ஐபிஓ மூலம் Matrimony.com சுமார் 3,767,254 பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் 500 கோடி ரூபாய் வரையிலான நிதிதிரட்டும் திட்டத்தில் இந்நிறுவனம் உள்ளது.
செபி மறுப்பு
2015ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் இறங்குவதற்தாக செபியிடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்தபோது செபி மறுப்பு தெரிவித்த நிலையில், ஜூலை மாதத்தில் தனது கனவு திட்டத்தை நிறைவேற்றியது.
முக்கிய பணிகள்
பங்குச்சந்தையில் தனது பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை விளம்பரம், வர்த்தக வளர்ச்சிக்காக செய்யப்படும் புதிய பிரோமோஷன் வேலைகள், புதிய அலுவலகத்திற்காக நிலம் வாங்குதல் (சென்னையில்), வங்கியில் இருக்கும் ஓவர்டிராப்ட் பணத்தை திருப்பிகொடுத்தல் என முக்கிய பணிகளுக்காக செலவிட திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 11
மும்பை பங்குச்சந்தையில் 11 முதல் 13ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஐபிஓவிற்காக திறக்கப்படும் Matrimony.com நிறுவன பங்குகள் 500 கோடி ரூபாய் வரையிலான நிதியை திரட்டும் முடிவில் உள்ளது.
முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?
சர்வதேச பங்குச்சந்சையின் பாதிப்புகள் இந்திய சந்தையில் அதிகமாக காணப்படும் நிலையில், உள்நாட்டு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம்.
அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணையத்தின் வாயிலாக வரன் தேடும் வழக்கத்தை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீடாக இல்லாமல் குறைந்த காலக்கட்டத்திற்கு ஐபிஓ மூலம் முதலீடு செய்யலாம். கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.