பெங்களுரூ: பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் மால் வர்த்தகத்தைத் துவங்கி சில வாரங்களே ஆன நிலையில் தனது முதல் விழா காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வரும் விழாக்காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது பேடிஎம். இதற்காக மார்கெட்டிங், கேஷ்பேக், பிரொமோஷன்ஸ் எனச் சுமார் 1,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
5000 பிராண்டுகள்
பேடிஎம் மால் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த அளவிலான பிரான்டட் ஸ்டோர் மற்றும் விற்பனையாளர்களை மட்டுமே வைத்திருந்த நிலையில், இந்த விழாக் கால விற்பனைக்காகச் சுமார் 1,000 பிராண்ட் ஸ்டோர்கள் மற்றும் 15,000 பிராண்ட் விற்பனையாளர்களைச் சேர்த்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தீபாவளிக்கு முன்பு குறைந்தபட்சம் 5,000 பிராண்ட் ஸ்டோர்களைப் பேடிஎம் மாலில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது பேடிஎம் நிர்வாகம்.
போட்டி
ஏற்கனவே விழாக்காலச் சலுகையில் குத்தாட்டம் போடும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மத்தியில் தற்போது பேடிஎம் 1000 கோடி ரூபாய் திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
இதன் மூலம் 3 நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான போட்டி உருவாகும். அதுமட்டும் அல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி என அனைத்தும் வாரிவழங்கப்படும்.
பட்ஜெட்
1000 கோடி ரூபாய் என்பது கடந்த வருடம் அமேசான் இந்தியா, ஸ்னாப்டீல், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் செலவிட்ட தொகையை விடவும் சுமார் 3 மடங்கு அதிகமாகும்.
300 கோடி ரூபாய்
கடந்த ஆண்டு இதேவிழாக்காலத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மத்தியிலான போட்டி உச்சத்தில் இருக்கும்போது இரு நிறுவனங்களும் சுமாக் 250-300 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை நடத்தியது.
பேடிஎம்
ஆனால் பேடிஎம் நிறுவனமோ 1000 கோடி ரூபாயில் அதுவரை இந்தியாவில் யாரும் செய்திராத வகையில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஈகாமர்ஸ்
ஏற்கனவே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தள்ளுபடி விற்பனையின் காரணமாகப் பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது எப்படி அதில் இருந்து மீண்டு வருவது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தால் போட்டி மேலும் மோசம் அடையும்,
இதனால் பல நிறுவனங்கள் அதீத நஷ்டத்தால் மூடப்படும் நிலைக்குக் கூடத் தள்ளப்படலாம்.
4 பில்லியன் டாலர்
இந்தச் சிறப்பு விழாக்காலத் தள்ளுபடியில் மட்டும் பேடிஎம் நிறுவனம் சுமார் 4 பில்லியன் டாலர் அதாவது 25,600 கோடி ரூபாய் அளவிலான விற்பனையைச் செய்ய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.