டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது ஆஸ்தான பெட்ரோலியம் சுத்திகரிப்புத் துறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட துறையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோ என்னும் பெயரில் டெலிகாம் துறையில் இறங்கியது.
ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல், இந்திய டெலிகாம் சந்தை தலைகீழாக மாறத் துவங்கியது. இன்று சந்தையில் இருக்கும் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தன்னிடம் இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்வதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்றால் ஜியோ, இதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்நிலையில், ஜியோ உடன் மல்லுக்கட்டி சண்டை போடும் ஏர்டெல், ஜியோவின் முக்கியமான ஆயுதத்தையே பயன்படுத்தி ஜியோவின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடிவு செய்துள்ளது ஏர்டெல்.
டெக்னாலஜி பயன்பாடு..
ஜியோ பயன்படுத்தி வரும் VoLTE என்னும் 4ஜி டெக்னாலஜியை ஏர்டெல் நிறுவனமும் தனது வாய்ஸ் சேவையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இப்புதிய சேவை அடுத்த ஒரு வாரத்தில் துவங்க உள்ளதாகவும், இந்த வருடத்தின் முடிவிற்குள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது ஏர்டெல்.
VoLTE டெக்னாலஜி
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போது இருக்கும் இணைப்பிலேயே மிகவும் தெளிவான வாய்ஸ்கால் மற்றும் ஹெச்டி காலிங் சேவையை அளிக்க முடியும்.
இந்திய சந்தையில் ஜியோ-விற்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தியது ஏர்டெல் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை..
ஏர்டெல் தற்போது திட்டமிட்டுள்ள படி தனது VoLTE தொழில்நுட்ப சேவை முதலில் மும்பையில் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பிற முக்கியப் பெரு நகரங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
ஐடியா
ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடியா நிறுவனம் தனது VoLTE தொழில்நுட்ப சேவையைப் பயன்படுத்த அனைத்து விதமான சோதனைகளையும் முடிந்து தயாராக உள்ளது.
ஆனால் இதன் அறிமுகம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
ஜியோ
VoLTE தொழில்நுட்பம் மற்றும் இலவச சேவையின் மூலம் ஜியோ கடந்த ஒரு வருடத்தில் சுமார் 130 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இது உண்மையிலேயே இந்திய டெலிகாம் சந்தையில் துவங்கப்பட்ட புதிய நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
தொழில்நுட்ப குறைபாடு..
இந்தியாவில் இருக்கும் பழைய டெலிகாம் நிறுவனம் ஏர்டெல் உட்பட அனைத்துமே சர்கியூட் ஸ்விச் டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது 4ஜி சேவை அளிக்கப்படும் நிலையில், டேட்டா மட்டும் 4ஜியிலும், வாய்ஸ் கால் 2ஜி மற்றும் 3ஜி சேவையின் கீழ் அளிக்கப்பட்டு வருகிறது.
மாற்றம்..
இந்த வாய்ஸ் கால் சேவையையே தற்போது ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 4ஜி சேவையில் அளிக்க முயற்சி செய்து வருகிறது.
வாடிக்கையாளர்
இந்நிலையில் சேவை தரத்தின் வாயிலாக வாடிக்கையாளர் மத்தியில் ஜியோவின் மீதான மதிப்புப் பாதிக்கப்படும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.