ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 197 சதவீதம் வரையில் உயர்ந்து மக்களின் பாக்கெட்டை காலி செய்தது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 1.09 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் நடப்பு ஆண்டில் 3.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என OECD பொருளாதார ஆய்வு 2017 அறிக்கை கூறுகிறது.
இளைஞர்கள்
இந்தியாவில் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு மட்டும் 30.83 சதவீதமாக இருக்கிறது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இப்படி இருக்கும்போது இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்காமல் வைத்துள்ளது தற்போதைய மத்திய அரசு.
மக்கள் தொகை
இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி 15-29 வயது வரம்புக்குள் இருக்கும் பட்சத்தில் 30.83 சதவீதம் என்பது மிகவும் அதிகமானது.
கிட்டதட்ட இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர் என்பதே இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அதிர்ச்சி
உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு வேலைவாய்ப்புப் பற்றாக்குறை செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கிறது, நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொடர்ந்து நம்பிக்கை வார்த்தைகளை மத்திய அரசு விசும் நிலையில், உண்மை தலைகீழாக உள்ளது.
தற்போது சந்தையில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
மோடியின் அறிவிப்புகள்
பிரதமர் மோடி நாட்டில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார், தற்போதைய நிலையைப் பார்த்தால் இந்த இலக்கை அடைவது மத்திய அரசால் முடியாத காரியம் எனத் தெரிகிறது.
வேலைவாய்ப்பு
பிரதமர் மோடி ஆட்சிக்க வந்த பின்னர் 20 லட்ச வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ள நிலையில் எப்படி 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
பிற நாடுகள்
15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு இந்தியாவில் 30.83 சதவீதம் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 36.65 சதவீதமாகவும், இந்தோனேசியாவில் 23.24 சதவீதமாகவும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் 20.62 சதவீதமாகவும், அர்ஜென்டீனாவில் 20.30 சதவீதமாக உள்ளது.
உணவு பொருட்கள்
இந்தத் திடீர் உயர்வுக்கு உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்த பணவீக்கத்தில் மிகப்பெரிய பங்கு கொண்ட உணவு பொருட்களின் விலை உயர்வு சாமானியர்களைப் பாதித்தது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் உயர்த்தியது.
எரிபொருள் மற்றும் மின்சாரம்
அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 4.37 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தை 197 சதவீத உயர்விற்குக் கொண்டு சென்றது.
கச்சா எண்ணெய்
புயல் காரணமாக அமெரிக்காவில் சுத்திகரிப்புப் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 வருட உயர்வை அடைந்து, பொதுமக்களை வாட்டிவதைக்கிறது.