ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் அதிகப்படியான நிறுவனங்களைக் கொண்டு வரும் நோக்கில், வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனைகளையும் ஆய்வுகளையும் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடி சோதனைகள் அடுத்த வாரம் முதல் துவங்கும் எனவும் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி அமைப்பு
இந்தச் சோதனையில் நிறுவனங்கள் வரி அமைப்பிற்குள் வர உண்மையிலேயே மறுக்கிறதா அல்லது ஜிஎஸ்டி அமைப்பிற்குள் வர ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களைச் சில முக்கியக் காரணிகளைக் கொண்டு குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் பட்டியலிட்டுள்ளது.
களத்தில் ஆய்வு
இந்த நிறுவனங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளது.
இதில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரப்படுவது மட்டும் அல்லாமல் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு
கடந்த வாரம் வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் சில நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்த பின்பு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
வகைப்படுத்தாத துறை
தற்போதைய நிலையில் வகைப்படுத்தாத துறை சார்ந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்குள் வராமல் தப்பி வருகிறது. இதனை முறையாக வரி அமைப்பிற்குள் கொண்டு வரவே இந்தத் திட்டம் திட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.