பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் தீபாவளி முதல் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாக தினம் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்த பிறகும் விலை உயர்வு அதிகமாகிக்கொண்டே செல்வதை விமர்சனம் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
பெட்ரோலிய துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான அவர்களுக்குத் தற்போது கூடுதலாகத் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்ச்சி அமைச்சக பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவர் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த போது அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது தான் விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பற்றிக் கேட்டதற்கு அவை அரசாங்கத்தால் இயக்கப்படுவதாகவும், அனைத்தும் சரியாக இருப்பதாகவும், அதிக விலை வைத்துள்ள நிறுவனங்களைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ன் கீழ் கொண்டுவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த தர்மேந்திர பிரதான் அப்படிச் செய்யும் போது கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகப் பயனடைவார்கள் என்று கூறினார்.