மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் மாநில அரசுகள் பெட்ரோல் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகளவில் உயர்த்தியுள்ளது, இது நடைமுறையில் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது எனக் கூறினார்.
ஆனால் பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிப்பதே மத்திய அரசாக இருக்கும்போது, தற்போதைய விலை உயர்விற்கு மாநில அரசுகளைக் கைகாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பது தான் தெரியவில்லை.
மத்திய அரசு வரி உயர்வின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?!
புள்ளிவிவரம்
பெட்ரோலிய துறையில் இருந்து மாநில அரசுகளுக்குக் கலால் வரி விதிப்பின் மூலம் அதிகளவிலான வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், 2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு இத்துறையின் மூலம் சுமார் 1,72,066 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இதுவே 2016-17ஆம் நிதியாண்டில் இத்தொகை இரட்டிப்பாகி 3,34,534 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
மாநில அரசு
இதேக்காலக்கட்டத்தில் மாநில அரசு பெற்ற வருமானத்தின் அளவு 1,60,554 கோடி ரூபாயில் இருந்து 1,89,770 கோடி ரூபாய் அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.
வரி உயர்வு
ஜனவரி 1, 2014ஆம் ஆண்டில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி 3.56 ரூபாயும், 9.48 ரூபாயாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 2017இல் மத்திய அரசு இதனை 17.33 ரூபாய் மற்றும் 21.48 ரூபாயாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் மாற்றம்
2014ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 123.61 டாலரில் இருந்து தற்போது 50.63 டாலர் வரையில் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் 123.61 டாலராக இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் விலை 68 ரூபாயாகவும், டீசல் விலை 40 ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாறுமாறான விலை உயர்வு
இந்தியாவில் பெட்ரோல் விலை சுத்திகரிப்பு விலையை விடவும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை டெல்லியில் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 26.65 ரூபாய். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு விற்பனை செய்யும்போது இதன் விலையை 30.7 ரூபாயாக உயர்த்தப்படுகிறது, இதன் பின் மத்திய கலால் வரியாக 21.48 ரூபாய், மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியான 14.96 ரூபாய், டீசல் கமிஷன் தொகையாக 3.24 ரூபாய் என ஒரு லீட்டர் பெட்ரோல் சந்தைக்கு வரும்போது 70.39 ரூபாயாக உள்ளது.
ஜிஎஸ்டி
மாநில அரசுகள் மீது குறைகூறும் மத்திய அரசே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என அவ்வப்போது அறிவித்து வருகிறது, இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ஒருவர்.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் வேலையை விடுத்து மத்திய அரசு இதன் வரியை உயர்த்து பணிகளையே மும்மரமாகச் செய்து வருகிறது.
28 சதவீத வரி
உலக நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஜிஎஸ்டி வரியமைப்பை இந்தியாவிலும் கொண்டு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏந்தொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகமான 28 சதவீத வரியை ஜிஎஸ்டியில் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டிசலை ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிப் பட்டியலில் கொண்டு வந்தால் கூடத் தற்போது இருக்கும் வரி விதிப்பில் அதிகளவிலான தளர்வுகள் கிடைக்கும்.
கர்நாடக
இம்மாநிலத்தில் நுழைவு வரியான 5 சதவீதம் சலுகையை ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நுகர்வோருக்கு அளிக்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது கர்நாடக மாநிலம். இந்த வரி சலுகையைப் பெட்ரோலிய அமைச்சகமும் சரி எண்ணெய் நிறுவனங்களும் சரி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் 5 சதவீத வரி குறைத்தும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் கலால் வரி விதிப்பால் பெங்களுரில் பெட்ரோல் விலை 7.31 ரூபாயும், டீசல் 4.71 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பயன்பாடு
2014-15 மற்றும் 2016-17ஆம் நிதியாண்டுகள் மத்தியில் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு 16.55 கோடி டன்னில் இருந்து 19.37 கோடி டன்னாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.