மோடி தலைமையிலான அரசின் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை, ஜிஎஸ்டி அமலாக்கம் என அடுத்தடுத்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என ஓஈசிடி அமைப்பு தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் சீனாவிற்குக் கடுமையான போட்டியாக விளங்கிய நிலையில், தற்போது சீனாவை விடவும் குறைவான வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
ஓஈசிடி அமைப்பு செய்த ஆய்வில் 2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.7 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஜூன் மாதத்தில் இது 7.3 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா
இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பில், முந்தைய கணிப்பை விடச் சுமார் 0.6 சதவீதம் குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், சீனா முந்தைய கணிப்பை விடவும் 0.2 சதவீதம் அதிகமாக அதாவது 6.8 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
வர்த்தக முதலீடு..
இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை நாட்டின் வளர்ச்சி மட்டும் அல்லாமல் வர்த்தக முதலீட்டையும் அதிகளவில் குறைத்துள்ளது.
ஆனால் நீண்ட கால நோக்கில் ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் எனத் தெரிவித்துள்ளது ஓஈசிடி அமைப்பு.
35 நாடுகள்
பாரீஸை தலைநகராகக் கொண்ட ஓஈசிடி அமைப்பு உலகில் 35 நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சந்தையின் செயல்பாடுகளைக் கவனித்து ஒரு நாட்டின் வளர்ச்சி அளவுகளைக் கணித்து வெளியிட்டு வருகிறது.
உலக ஜிடிபி
2017ஆம் ஆண்டு உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி அளவு 3.5 சதவீதமாக இருக்கும் நிலையில், 2018ஆம் ஆண்டில் இது 3.7 சதவீதமாக உயரும் எனத் தெரிவித்துள்ளது ஓஈசிடி அமைப்பு.