இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், புதன்கிழமை இக்கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.00 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 6.25 சதவீதமாக நீடிக்கும்.
நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், இலக்கை அடைவதற்காகவும் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வங்கிகள் அளிக்கும் கடனில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது. ஆகவே ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ குறையாது என்பது கவனிக்க வேண்டியது. ஆனால் பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திர வங்கி ஆகியவை கடனுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரமே அறிவித்துள்ள நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி எவ்விதமான மாற்றமும் அறிவிக்கா சூழ்நிலையில் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
மேலும் நடப்பு நிதியாண்டுக்கான உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி இலக்கு 7.3 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.