அமெரிக்காவில் டெஸ்லா என்றால் இந்தியாவில் மஹிந்திரா தான். ஆம், இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்களை அதிநவீன முறையில் இன்றைய நடைமுறைக்கு ஏற்றார் போல் தயாரிப்பதில் மஹிந்திரா & மஹிந்திரா முன்னோடி என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் வெறும் 1,80,000 ரூபாய் விலை வித்தியாசத்தில் மஹிந்திரா குழுமம், டாடா மோட்டார்ஸிடம் மத்திய அரசின் மிகப்பெரிய ஆர்டரை இழந்துள்ளது.
10,000 கார்கள்
மத்திய அரசு 10,000 எலக்ட்டிரிக் கார்களை வாங்க முடிவு செய்து நாட்டின் முன்னணி எலக்ட்டிரிக் கார் தயாரிக்கும் நிறுவனங்களிடம் விலை விண்ணப்பத்தைக் கோரியது.
இந்தியாவில் எலக்ட்டிரிக் கார் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த மிகப்பெரிய ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாடா மோட்டார்ஸ் முந்திக்கொண்டது.
விலை விண்ணப்பம்
மஹிந்திரா ஒரு காரின் விலையை 13 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்துள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் ஜிஎஸ்டி வரிகள் உட்பட 11.2 லட்சம் ரூபாய்க்குத் தனது விலை பட்டியலை சமர்ப்பித்தது.
போட்டி..
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மஹிந்திரா, தானும் டாடா மோட்டார்ஸ் கூறிய விலையிலேயே காரை அளிக்கும் என அரக்கு உறுதி செய்துள்ள நிலையில் 10,000 கார்களில் ஒரு பகுதியை டாடா மோட்டார்ஸும், மற்றொரு பகுதியை மஹிந்திராவும் பெற்றுள்ளது.
முதல் 500 கார்கள்
இந்நிலையில் 10,000 கார்களில் முதல் 500 கார்களை அரசு முதற்கட்டமாகப் பெற உள்ளது. இதில் 150 கார்களை மஹிந்திரா டாடா மோட்டார்ஸ் கூறிய விலையில் அளிக்க வேண்டும்.
இதன் மூலம் மீதமுள்ள 9,500 கார்களில் 40 சதவீத கார்களை மஹிந்திர தயாரிப்பதற்கான ஆணையைப் பெறும். இல்லையெனில் ஆர்டர்கள் கைமாறலாம்.
எந்த லாபமும் இல்லை..
11.2 லடசம் ரூபாயில் கார்களை வெளியிட்டால் நிறுவனத்திற்கு எந்த விதமான லாபமும் இல்லை. டாடா மோட்டார்ஸ் எந்தக் கண்ணோட்டத்தில் திட்டத்தில் இந்த விலையைக் குறிப்பிட்டுள்ளது என்று தனக்குப் புரியவில்லை என்று மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பவன் கோங்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா
சந்தையில் தற்போது மஹிந்திரா வெளியிட்டுள்ள 2 எலக்ட்ரிக் கார்களான e20 மற்றும் e-Verito வாடிக்கையாளர்கள் மத்தியிலும், சந்தையில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடு செய்ய முயற்சி..
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ள விலையில் கார்களைத் தயாரிக்கப் பேட்டரி முதல் காரின் வடிவமைப்பு முதல் அனைத்தும் ஆய்வு செய்து விலையை எப்படிக் குறைக்க முடியும் என்ற வகையில் ஆய்வில் இறங்கியுள்ள மஹிந்திரா மஹிந்திரா.