இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவீடுகளை உலக வங்கி, ஐஎம்எப், ரிசர்வ் வங்கி ஆகியவை புட்டுபுட்டு வைத்துள்ள நிலையில், நாட்டில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், துவண்டுபோன பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் மோடி தலைமையிலான பொருளாதார ஆலோசனை அமைப்புப் புதன்கிழமை முதல் முறையாகக் கூடியது.
அதில் பல முக்கிய ஆலோசனைகளும் முடிவுகளும், எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
முதல் கூட்டம்
பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த பொருளாதார ஆலோசனை அமைப்பின் முதல் கூட்டத்தில், அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை மேம்படுத்தும் 10 முக்கியத் துறைகளைக் கண்டறிந்துள்ளது.
தலைமை
பிபெக் டிப்ராய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வகைப்படுத்தாத துறை, நடப்பு நிதியாண்டின் வரைவு திட்டம், நாணய கொள்கை, பொது மக்களின் செலவினங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு எனப் பல துறைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அரவிந்த் சுப்பிரமணியன்
நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் இக்கூட்டத்தில் நட்டின் பொருளாதாரம் குறித்து விரிவான வரைபடத்தையும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியத் திட்டம் மற்றும் பாலிசியைக் குறித்து விவரித்தார்.
புதிய அமைப்பு
நாட்டின் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 3 வருடச் சரிவான 5.7 சதவீத அளவீட்டை அடைந்த பின்பு மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொருளாதார ஆலோசனை அமைப்பை மீண்டும் அமைந்தார். 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக நியமிக்கப்பட்ட போது இந்த அமைப்பு வேண்டாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பிற்கு நிட்டி அயோக் அமைப்பின் முக்கிய உறுப்பினரான பிபெக் டிப்ராய் தலைமை விகிக்கிறார்.
பட்ஜெட் 2018-19
இக்குழு அடுத்த ஒரு மாதத்திற்குப் பட்ஜெட் 2018-19 அறிக்கையைச் சிறப்பான முறையில் உருவாக்கும் பணியில் ஈடுப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வடிவம்..
இக்குழுவை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்தைச் சரியாகக் கணித்து உடனடியாக நடவடிக்கையை எடுக்கும் அளவிற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சீர்குலைந்த வர்த்தகச் சந்தையே முக்கியக் காரணமாக உலக வங்கி முதல் அனைத்து முன்னணி பொருளாதார ஆய்வு அமைப்புகளும் கூறுகிறது.
உலக வங்கியும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள விளக்கத்தைப் பாருங்கள்
ஐஎம்எப்
சர்வதேச நாணய நிதி அமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி அளவைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.
இந்நிலையில் 2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கணிப்பை ஐஎம்எப் 7.2 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதேபோல் 2019ஆம் ஆம் நிதியாண்டில் இது 7.4 சதவீதம் வரையிலான வளர்ச்சியை மட்டுமே பெறும் என்று தனது முந்தைய கணிப்பு அளவீடுகளான 7.7 சதவீதத்தில் இருந்து குறைத்துள்ளது.
உலக வங்கி
2015ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, 2017ஆம் ஆண்டில் 7 சதவீதமாகக் குறையும் என உலக வங்கியும் தனது முந்தைய கணிப்பான 7.2 சதவீதத்தில் இருந்து குறைத்துள்ளது.
சீனா
வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற முக்கியமான அந்தஸ்தை இந்தியாவிடம் இருந்து சீனா சில மாதங்களுக்கு முன்பு பறித்துக்கொண்ட நிலையில், 2018ஆம் ஆண்டில் சீனா 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நாட்டில் 90 சதவீத வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகைப்படுத்தாத துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டதாரிகள் மட்டும் அல்லாமல் கூலி தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கியின் வராக்கடன்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இணையாக வங்கிகளில் வராக் கடன் அளவீடுகள் வரலாறு காணாத வகையில் 9.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் வங்கிகள் பெரிய அளவிலான கடன்களை அளிப்பதைத் தவிர்த்து வருகிறது.
வர்த்தகம் முடக்கம்..
வங்கிகள் தங்களது இருப்பு நிலையைப் பாதுகாத்துக்கொள்ளப் பெரிய அளவிலான அதாவது ஆபத்து அதிகமாக உள்ள கடனை அளிக்க மறுத்து வருகிறது. அப்படிக் கொடுத்தாலும் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, இவை அனைத்திற்கும் விஜய் மல்லையாவின் கடன் பிரச்சனை ஆரம்பம் என்றால் மிகையாகாது.
இதனால் வங்கிகள் தற்போது சிறு அளவிலான கடன், அதாவது வீட்டுக் கடன், சிறு தொழில்களுக்கான கடன் ஆகிய ஆபத்து குறைவான கடன்களை மட்டுமே அதிகளவில் முன்னுரிமை கொடுத்து வர்த்தகம் செய்துவருகிறது.
பாதிப்பு..
வங்கிகளின் கடன் மறுப்பால் பெரிய நிறுவனங்களின் வரிவாக்கம் மற்றும் புதிய வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. இதனைத் தொடர்ந்தே புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.
10 துறைகள்
இத்தகைய பிரச்சனைகளைக் களையவே தற்போது மோடி மற்றும் பிபெக் டீப்ராய் தலைமையிலான குழு 10 துறைகளைத் தேர்ந்தெடுத்து புதிய திட்டங்களைத் தீட்டியுள்ளது.
இத்திட்டங்கள் மூலம் அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் எனக் கூறுகிறது இக்குழு. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், வேறு என்ன செய்வது.