தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம் மற்றும் சலுகைகள் அறிவித்துள்ள நிலையில், மதுபான விற்பனை மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறும் வகையில் 3 வருடத்திற்குப் பின் மதுபானங்களின் விலையை உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.
தவிப்பு..
தமிழக அரசு டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு முழுவதும் மதுபானம் விற்பதற்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வந்தாலும், அதிக வருமானம் அளிக்கும் இப்பிரிவின் வர்த்தகத்தைக் கைவிடமுடியாமல் தவித்து வருகிறது.
ஜெ முதல் பழனிசாமி வரை..
டாஸ்மாக் குறித்து எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது டாஸ்மாக் வர்த்தகத்தையும் கடைகளையும் படிப்படியாகக் குறைப்பதாக மக்களுக்கு வாக்குறுதியை தெரிவித்தார், இன்றைய முதல்வரான பழனிசாமி அவர்களும் இதே குறிக்கோளை பின்பற்றுவதாகவும் அறிவித்தார்.
விலை உயர்வு..
இந்நிலையில் டாஸ்மாக் மூலம் அதிக வருமானத்தைப் பெற திட்டமிட்ட தமிழக அரசு, தீபாவளி பண்டிகை வருவதை முன்கூட்டியே சுதாரித்து மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இதன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 180மில்லி மதுபானத்திற்கு 12 ரூபாயும், பீருக்கு 10 ரூபாயும் உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
3 வருடம்..
தமிழக அரசு கடைசியாக 2014ஆம் ஆண்டு இதன் விலையை உயர்த்திய நிலையில், தற்போது 10 ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் வருடத்திற்குச் சுமார் 2,250 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மதுபானங்களின் விற்பனை அதிகமாக இருக்கும், இதனை மைய கருத்தாகக் கொண்டு தமிழக அரசு தற்போது விலையை உயர்த்தியுள்ளது.
7வது சம்பள கமிஷன்
இதனிடையில் புதன்கிழமை தமிழக அரசு வெளியிட்ட புதிய சம்பளத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வெளியிட்ட 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் ஒப்பான அளவு.
இந்த உயர்வின் மூலம் 12 லட்ச ஊழியர்களும், 6 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
கூடுதல் செலவுகள்
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு சுமார் 14,719 கோடி ரூபாய்க் கூடுதலாகச் செலவுகள் வருகிறது.
தமிழ்நாடும், தமிழக அரசும் தற்போது இருக்கும் சூழலில் வருமானத்தை உயர்த்த எளிமையான வழியாக டாஸ்மாக் விளங்குகிறது.
முழு விபரம்


Click it and Unblock the Notifications