இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புப் பற்றாக்குறை தான். இவ்விரண்டுக்கும் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பும் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியின் அமலாக்கம் ஆகியவையே முக்கியக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு வாயிலாக மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
சீனாவும் இந்தியாவும்..
எல்லையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பிரச்சனை அவ்வப்போது கிளம்பினாலும், இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டியது சீனா. ஆயினும் இந்தியா இத்திட்டத்தை ஜப்பான் நிறுவனத்திற்கும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதில் கசப்பான அனுபவத்தைச் சீனா கண்டாலும், தற்போது மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது இந்தியா.
600 நிறுவனங்கள்
இந்நிலையில் தற்போது சேனி ஹெவி இண்டஸ்ட்ரீ தலைமையில் சுமார் 600 நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 85 பில்லியன் டாலர் அதாவது 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுமார் 7,00,000 வேலைவாய்ப்புகளை அடுத்த 5 வருடத்தில் உருவாக்க முடியும்.
சேனி ஹெவி இண்டஸ்ட்ரீ
உலகின் முன்னணி மெஷினரி உற்பத்தி நிறுவனமான சேனி ஹெவி இண்டஸ்ட்ரீ நிறுவனம் மட்டும் இந்தியாவில் 9.8 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சீன நிறுவனங்கள்
இதனைத் தொடர்ந்து அமேசான், சீன நிறுவனங்களான பசிபிக் கன்ஸ்ட்ரக்ஷன், சீனா பார்சூன் லேன்டு டெவலப்மென்ட் மற்றும் டாலியன் வான்டா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் 5 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளதாக முடிவு செய்துள்ளது.
பிற நிறுவனங்கள்
உலகின் ஆடம்பர கார்களுக்கெனப் புகழ் பெற்று விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் 3.7 பில்லியன் டாலரும், ஆஸ்திரேலியாவின் பெர்டாமான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 3 பில்லியன் டாலரும் முதலீடு செய்ய விரும்பம் தெரிவித்துள்ளது.
சீனா முன்னிலை
இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் படி இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது.
தற்போது அளிக்கப்பட்டுள்ள முதலீட்டு விருப்ப விண்ணப்பங்களில் சீனா 42 சதவீதமும், அமெரிக்கா 24 சதவீதமும், பிரிட்டன் 11 சதவீதம் அளவிலான விண்ணப்பங்களை அளித்துள்ளது.
2 வருடம்
கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் முதலீடு செய்யச் சுமார் 114 நாடுகளிடம் இருந்து 1,00,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்வெஸ்ட் இந்தியா
இந்நிலையில் தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்வெஸ்ட் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதை பரப்புரை செய்து வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வர்த்தகச் சந்தைக்கு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற முடிவில் உள்ளது.
1 லட்சம் வேலைவாய்ப்புகள்
இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு இதுவரை சுமார் 7.43 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்து சுமார் 1,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
100 பில்லியன் டாலர் இலக்கு
இந்தியாவின் கீரீன்பீல்டு மற்றும் பிரவுன்பீல்டு ஆகியவற்றில் அடுத்த 2 வருடத்தில் 100 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளோம் என இன்வெஸ்ட் இந்தியா அமைப்பின் தலைவர் தீபக் பங்ளா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அன்னிய முதலீடாக 2017ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 43 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கட ந்த வருடத்தை விடவும் 9 சதவீதம் அதிகமாகும்.
மோடியின் பிரச்சனை தீரும்..
இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில் இந்திய நிறுவனங்களை விட வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.
2 வருடத்தில் 1,00,000 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டுப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மோடி தற்போது சந்திக்கும் வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அனைத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துவிட்டால் இந்தியா என்னவாகும் என்பதே தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.