உலகளவில் இந்திய மென் பொருள் வல்லுநர்களுக்குப் பெறும் வரவேற்பு இருக்கின்றது. மறுபக்கம் புதுப்புது தொழிற்நுட்பங்கள் ஐடி துறையில் வந்துகொண்டு தான் உள்ளது. அதனால் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற முக்கிய அதிகாரிகள் எடுக்க வேண்டிய முடிவுகளை மென்பொருள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை என்ற நிலை உருவாகி வருகின்றது.
ஒவ்வொரு நாளும் தொழிற்நுட்பம் வேகமாக வளரும் இந்த நேரத்தில் ஆட்டோமேஷன் துறை ஏற்கனவே ஊழியர்களின் பணி நீக்கங்களுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கின்றது. அதே நேரம் தற்போது செயற்கை நுண்ணறிவும் ஆட்டோமேஷனுடன் சேர்ந்துகொண்டு ஊழியர்களின் வேலையினைப் பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்ப வாய்ப்புகள் அதிகம்.
ஐடி நிறுவனங்கள்
கூகுள் முதல் சேப் வரை அனைத்து முக்கிய ஐடி நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த வேலைகளில் தீவரமாக இறங்கிச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மனிதன் எடுக்க வேண்டிய வணிகம் சார்ந்த முடிவுகளை இயந்திரங்களும், மென்பொருளும் எடுக்கும். இதனால் மனிதக் குலத்திற்கு எவ்வளவு பாதிப்பு என்று தற்போதைக்குச் சொல்ல முடியாது.
சரி செயற்கை நுண்ணறிவு என்னவெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு மெஷின் லர்னிங், டீப் லர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் இங்குப் பார்ப்போம்.
மெஷின் லர்னிங் மற்றும் டீப் லர்னிங்
தரவுகளை அளித்து இயந்திரங்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் முறைதான் மெஷின் லர்னிங். அதிலும் டீப் லர்னிங் என்ற அணுகுமுறையில் தரவை வைத்து மென்பொருள் கற்றுக்கொள்ளும் முறையாகும்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது மென்பொருளை முடிவு செய்ய அனுமதிக்கும் முறையாகும். இதுபோன்ற மாற்றங்களைச் சமுகத்தில் இன்னும் சில வருடங்களில் கொண்டு வருவதினால் ஒரு நிறுவனத்தினைத் திறமையானதாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட உதவும்.
இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ
மென் பொருள் நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்றவை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 2020-ம் ஆண்டிற்குள் அனைத்து மென்பொருள்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முதலீடுகள்
மேலும் 2020-ம் ஆண்டுச் செயற்கை நுண்ணறிவில் தான் அனைத்து நிறுவன தலைவர்களும் விரும்பி முதலீடு செய்வார்கள் என்றும் கூறுகின்றனர்.
எனவே பின் வரும் துறைகளில் செயற்கை நுண்ணறிவு எந்த மாதிரியான தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
வங்கி மற்றும் நிதித் துறை
வங்கிகள் தங்களது கடன் மற்றும் ரிஸ்க் பிரிவில் ஆட்டோசனை புகுத்த முயற்சி செய்து வருகின்றன. எனவே இந்தத் துறையில் வாடிக்கையாளர் குறித்த முடிவுகளை எல்லாம் ஆராய்ந்து எடுக்க வட்டி விகித மாற்றங்களைப் புகுத்த செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம். அதுமட்டும் இல்லாமல் கடன் திருப்பிச் செலுத்துதல், போன்றவற்றையும் ஆராய உதவும்.
இதனால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை பாதிப்பது மட்டும் இல்லாமல் அதிகமாகக் குறையவும் வாய்ப்புள்ளது.
பங்கு சந்தை
நியூ யார்க்கில் இருந்து செயல்பட்டு வரும் நெக்ஸ்ட் ஏஞ்சல்ஸ் நிறுவனம் 30 தரவு ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் பங்கு சந்தையில் முதலீடுகளை நிர்வகிக்கும் தளம் ஒன்றைச் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பங்கு சந்தை புரோக்கர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் பணிகள் பாதிப்படைய உள்ளது.
பிபிஓ
பிபிஓ எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஏற்கனவே ரோபோட்டிக் குரல் மூலம் சேவை வழங்குவது அதிகரித்து வரும் நிலையில் இந்தத் துறையிலும் அதிகளவில் செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புகள் உண்டு. அதனால் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பெறும் அளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஆட்டோமொபைல்
தாங்கல் தயாரிக்கும் இருக்கும் கார்களின் தொழிற்நுட்பத்தில் மென்பொருளைப் புகுத்தி புதிய மாற்றங்களைச் செய்ய இருப்பதாக வோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தினால் உற்பத்தி முதல் விற்பனை, வாடிக்கையாளர் சேவை என அனைத்து பிரிவிலும் வேலை வாய்ப்புகள் குறையும்.
ரீடெய்ல்
ரிடெய்ல் பிரிவில் ஒரு நிறுவனம் பல வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நிர்வகிக்க வேண்டும். எனவே பெங்களூருவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் மாயா என்ற செயற்கை நுண்ணறிவு கொண்டு மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் சந்தை நிலவரம், விற்பனை விவரம் என அனைத்தையும் எளிதாகச் செய்து வருகின்றார். இதற்காக 100 மில்லியன் டாலர் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால் இ-காமர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகளவில் நடக்கும்.
உற்பத்தி மற்றும் விவசாயம்
இன்றைய சூழலில் உற்பத்தி துறையில் ரோபோட்க்ஸ் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. உற்பத்தித் துறை மட்டும் இல்லாமல் விவசாயப் பொருட்கள் பற்றிய தரவுகளைச் செயற்கை நுண்ணறிவில் அளிப்பதன் மூலம் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
சுகாதாரம்
சுகாதாரத் துறையில் மருத்துவக் காப்பீடு, மருத்துவத் தகவல்கள் மற்றும் மருந்து விற்பனை குறித்த தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வகிக்க முடியும்.
வேலை வாய்ப்பு
ஏற்கனவே ஆட்டோமேஷன் நுழைவால் வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவால் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதால் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெறும் சிக்கலாக உள்ளது.