இந்தியாவில் டெலிகாம் சந்தையும், ஸ்மார்ட்போன் பயன்பாடும் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் 60 சதவீத மக்கள் சாதாரணப் பியூச்சர் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் பெற்று வரும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வருமானங்களின் பெறும் பகுதி மீதமுள்ள 40 சதவீத வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே பெற்று வருகிறது.
இதனால் பியூச்சர் போன்களைப் பயன்படுத்தும் இந்த 60 சதவீத வாடிக்கையாளர்களே தற்போது டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கியக் குறியாக உள்ளது.
முதன்முதலில்
இந்த 60 சதவீத சந்தை பற்றி அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்குத் தெரிந்து இருந்தாலும், இதனை எப்படி வர்த்தகமாக்குவது என்பது தெரியாமல் நின்று கொண்டு இருந்த நிலையில்.
இதற்கான ரோடுபேப்-பை முதன்முதலாக ஜியோ வகுத்தது.
ஜியோ போன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ மூலம் சீனா மற்றும் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து 4ஜி சேவைப் பெறும் போனைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்தது.
இலவசமாகப் போன்
இந்தப் போனை சாமானியர்களின் கையில் கொண்டு சேர்க்கும் வகையில், 1500 ரூபாய் முன்பணமாகப் பெற்று, இத்தொகையை 3 வருடத்திற்குப் பின் திருப்பி அளிப்பதாகக் கூறி இதற்கான ஆர்டர் பெற துவங்கியுள்ளது.
ஏர்டெல்
ஜியோ தனது 1,500 ரூபாய் போனை அறிமுகம் செய்த சில நாட்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு மூக்கு வேர்க்க துவங்கியது. இதனால் அவசர அவசரமாகப் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து ஜியோவின் 1,500 ரூபாய் போனை விடவும் குறைவான விலையில் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து போனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
ஜியோ பியூச்சர் போனை வெளியிடும் காரணத்தால், ஏர்டெல் ஜியோ அறிவித்த விலையை விடவும் குறைவான விலை 4ஜி ஸ்மார்ட்போனையே வழங்குவதாக அறிவித்துள்ளது.
வோடபோன்
ஜியோ திட்டத்தை ஏர்டெல் திருடிய நிலையில், தற்போது வோடபோனும் இதேபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இது இரு நிறுவனங்கள் அறிவித்த விலையை விடவும் குறைவானதாகும்.
பெருமாளும்.. ஹனுமாரும்..
ஓரே திட்டத்தை மாறிமாறி காப்பி அடித்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வோடபோன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெறும் 1000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்களை அளிக்க முடிவு செய்துள்ளது.
ஜியோ உடன் போட்டி
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ சேவை கட்டணத்திற்குப் போட்டியாகத் தங்களது சேவையின் கட்டணத்தையும் குறைத்த நிலையில், தற்போது மலிவான போன் விற்பனையிலும் ஜியோவுடன் ஏர்டெல் மற்றும் வோடபோன் போட்டி போடுகிறது.
ஐடியா இந்தப் போட்டியில் நேரடியாக இறங்கவில்லை, காரணம் வோடபோன் நிறுவனத்தை ஐடியா கைப்பற்றுகிறது.
மக்களுக்குதான் லாபம்
ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டியின் காரணமாக ஸ்மார்ட்போன் விலை அதிகளவில் குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் வெடித்துள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் புரட்சி மூலம் ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருக்கும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்த நிலையில் டெலிகாம் துறையில் வெடித்துள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் புரட்சி மூலம் கூடுதலான வர்த்தகம் கிடைக்கும்.
மொபைல் வாடிக்கையாளர்
இந்தியாவில் மொத்தம் 850-900 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 500 மில்லியன் வாடிக்கையாளர் பியூச்சர் போன்களைப் பயன்படுத்துபவர்கள்.
மொத்த எண்ணிக்கையில் 170 மில்லயன் வாடிக்கையாளர்கள் 4ஜி ஸ்மார்ட்போனையும், 140 மில்லியன் வாடிக்கையாளர்கள் 3ஜி ஸ்மார்ட்போனையும், 30-40 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி ஸ்மார்ட்போனையும் பயன்படுத்துகின்றனர்.
அரச திட்டம் திருட்டு..
அனைத்தையும் தாண்டி முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து தான் பெற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?