இந்தியாவின் பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் மட்டும் இருந்து வந்த நிலையில் இந்த வருடம் ரீடைல் மற்றும் டெலிகாம் துறை வர்த்தகத்தில் புதிதாக இறங்கியுள்ளது.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 75 சதவீதம் வரையிலான வளர்ச்சி அடைந்து இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் எட்டாத சந்தை மூலதன அளவான 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
ரீடைல் வர்த்தகம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாக ரீடைல் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகமாக ரிலையன்ஸ் ரீடைல் கிளை இன்று வளர்ந்துள்ளது. இப்பிரிவு வர்த்தகத்தை முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி கவனித்து வருகிறார்.
டெலிகாம் சேவை
2 வருடங்களாக மிகப்பெரிய குழுவுடன் திட்டமிட்டு மிகப்பெரிய முதலீட்டு உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோ சேவையைத் துவங்கியது மொத்த டெலிகாம் துறையையே தனது இலவச திட்டங்கள் மூலம் தலைகீழாக மாற்றியது.
இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் இந்த வருடம் மட்டும் 75 சதவீதம் வரையில் உயர முக்கியக் காரணமாகும்.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
கடந்த வாரம் கூட ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைக்கான கட்டணத்தை 15 சதவீதம் வரையில் உயர்த்தி அதிக வருவாய் பெறுவதில் தனது கவனத்தைச் செலுத்த துவங்கியுள்ளது.
இது மக்களுக்குச் சற்று கவலை தரும் விஷயமாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் கண்ணோட்டத்தில் இது சிறந்த முடிவாகவே பார்க்கப்படுகிறது.
புதிய உச்சம்
இதன் மூலம் வியாழக்கிழமை பங்குச்சந்தை முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 0.78 சதவீதம் வரையில் உயர்ந்து வர்த்தகம் முடிவடைந்தது. மேலும் நேற்றைய வர்த்தகத்தில் 1.94 சதவீதம் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது.
6 லட்சம் கோடி ரூபாய்
இந்த அதிரடி உயர்வின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 6.02 லட்சம் கோடி ரூபாய் என்ற இமாலய உச்சத்தை அடைந்தது.
ஏப்ரல்
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டணத்தை வசூலிக்கத் துவங்கியது. இன்று முதல் இன்று வரையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.