இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன்பு தனது 399 சேவை திட்டத்தின் நாட்களைக் குறைத்தது சேவைக் கட்டணத்தைத் தடாலடியாக 15 சதவீதம் அதிகரித்து.
இது முன்னணி நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள விலை அளவுகளை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களை நாடிச் சென்றனர்.
ஏர்டெல்
ஜியோவின் கட்டண உயர்வாலும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் கூட்டணியாலும் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 10 வருட உயர்வை அடைந்தது. இதேபோல் பிற டெலிகாம் நிறுவனங்களும் கணிசமான உயர்வைச் சந்தித்து.
இதே நிலை தொடர்ந்தால் ஜியோ மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதை ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சுதாரித்துக் கொண்டார்.
வாடிக்கையாளர் மன மாற்றம்..
ஜியோ தனது கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியதன் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக 50 ரூபாய் மதிப்பில் 8 கூப்பன்களை வழங்கியது. இதனை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் ஜியோ அறிவித்தது.
கட்டண உயர்வில் கடுப்பான வாடிக்கையாளர்கள், சேவையின் தரத்தில் குறைபாடு கண்டு ஏர்டெல் போன்ற பிற டெலிகாம் சேவைக்கே மீண்டும் பயணித்தனர்.
ரீசார்ஜ் எண்ணிக்கை
தீபாவளி ஆஃபருக்குப் பின் ஜியோ நிறுவனத்தின் ரீசார்ஜ் மற்றும் வர்த்தக அளவீடுகள் அதிகளவில் குறைந்து வந்தது. இதனைக் கவனித்த ஜியோ நிர்வாகம் தற்போது வெளியேறிய வாடிக்கையாளர்களை மீண்டும் பெறும் திட்டத்தில் அடுத்த ஒரு ஆஃபரை வழங்கியுள்ளது.
மொபைல் வேலெட்
ஜியோ உடன் கூட்டணி வைத்துள்ள வேலெட் நிறுவனங்களான அமேசான் பே, ஆக்சிஸ் பே, ப்ரீசார்ஜ், மொபிவிக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய வாடிக்கையாளர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 300 ரூபாய் கேஷ்பேக் நேரடியாக வேலெட்டில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மட்டுமே..
இந்த ஆஃபர் வருகிற 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் மட்டுமே அளிப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி
ஜியோவின் சேவை தரம் பிற முன்னணி நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருந்த போதிலும் கட்டணம் மலிவாக இருந்த காரணத்தால் ஜியோ உடன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இணைந்து வந்தனர். ஆனால் கட்டண உயர்வுக்குப் பின் மீண்டும் பழைய நெட்வொர்க்கு சென்றுள்ளனர்.
இவர்களை மீண்டும் இழுக்கவே இத்தகைய கேஷ்பேக் அளிப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இனி முடிவை வாடிக்கையாளர்கள் தான் எடுக்க வேண்டும்.
கிளியரான திட்டம்
ஜியோவின் ஒவ்வொரு திட்டத்திற்கும் போட்டி நிறுவனங்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் நெட்வொர்க்-இல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என் செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
பங்கு மதிப்பு
ஜியோவின் இந்த அறிவிப்பு இதன் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதா என்று தெரியவில்லை ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 0.17 சதவீதம் சரிந்து 503.40 ரூபாய்க்கு சரிந்துள்ளது, ஐடியா நிறுவன பங்குகள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 96.65 ரூபாய் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்பட்டது.
சராசரி வருவாய்
இப்புதிய ஆஃபர்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி வாடிக்கையாளர் வருவாய் அளவு 54 ரூபாயாக உள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
தற்போது ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் சுமார் 138.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
நிதி நிலை
செப்டம்பர் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வருவாய் 6,147 கோடி ரூபாயாக உயர்ந்தாலும், லாபம் அடையாமல் 270.59 கோடி ரூபாய் நஷ்டத்தை மட்டுமே பெற்றுள்ளது.