இந்தியாவின் முன்னணி லோக்கல் சர்ச் இன்ஜிந் நிறுவனமான ஜஸ்ட் டயல் மூலம் பல வர்த்தக நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது மட்டும் அல்லாமல் மக்களின் தேவையை உடனடியாகத் தீர்க்கும் ஒரு தளமாக அமைந்து வருகிறது. இணையத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தற்போது அதிகளவில் இணைய விளம்பரங்களை நாடி வரும் காரணத்தால் சமீப காலத்தில் சற்று குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தாலும் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர் பெற்று வர்த்தகத்தைச் சீரான முறையில் நடத்தி வரும் ஒரு வெற்றி நிறுவனமாகும்.
கூகிள்
இந்நிறுவனத்தை அமெரிக்கச் சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகிள் வாங்குவதற்குப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, இந்த அறிவிப்பு வெளியானதில் பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் மீது அதிக முதலீடுகள் குவிந்தது.
20 சதவீத வளர்ச்சி
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகள் 6 வருட உயர்வான 549.85 ரூபாய் என்ற அளவீட்டை அடைந்து சுமார் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
52 வார உயர்வு மற்றும் சரிவு
மார்ச் 17,2017ஆம் தேதி ஜஸ்ட் டயல் நிறுவனம் 52 வார உயர்வான 619.45 ரூபாய் என்ற நிலையை அடைந்தது. அதேபோல் டிசம்பர் 27, 2016இல் 52 வார குறைவான 318.20 ரூபாய் அளவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச்சந்தை
கூகிள் மற்றும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை குறித்த செய்திகளை உறுத்திப்படுத்த கோரி தேசிய பங்குச்சந்தை ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
1996இல் துவக்கம்
ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியாவில் 1996ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டு, இந்நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிட்டராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டதன் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. மேலும் இந்நிறுவனத்தின் கணிசமான பங்கை அமிதாப் வைத்துள்ளார்.