இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகள் மீது கடுமையான நடவடிக்கைகளை வருமான வரித்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை 30 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியுள்ளவர்களைத் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் முழு வேகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர்
மத்திய நேரடி வரி அமைப்பு 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான சொத்துகளை வாங்கியுள்ள வருமான வரி செலுத்தும் தனிநபர் மற்றும் நிறுவனங்களை வகைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.
இது பினாமி சொத்துக்களை முடக்கும் புதிய சட்டத்தின் முதற் படி என CBDT அமைப்பின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
ஷெல் நிறுவனங்கள்
அதேபோல் இப்புதிய சட்டத்தின் கீழ் பங்குச்சந்தை வர்த்தகத்திற்குத் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்ட நிறுவன தலைவர்களையும் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மத்திய நேரடி வரி அமைப்பின் தலைவர் சுஷில் சந்திர தெரிவித்துள்ளார்.
621 பேர்
வருமான வரி கணக்குகளோடு இணைக்கப்பட்டத்தில் சந்தேகத்திற்கும் இடம் அளிக்கும் வகையில் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்களை 621 பேர் வாங்கியுள்ள முதல் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு மட்டும் சுமார் 1800 கோடி ரூபாய்.
கருப்பு
புதிய பினாமி சட்டத்தின் மூலம் இந்தியாவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் அனைத்து முதலீட்டு மற்றும் வாய்ப்புகளும் களைய முடியும். மேலும் ஷெல் நிறுவனங்களின் மோசடிகள் அடியோடு அழிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காகவே 30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
24 குழுக்கள்
பினாமி சொத்துக்களை முடக்குவதற்காகவே இந்தியா முழுவதும் தற்போது 24 குழுக்கள் அமைக்கப்பட்டுப் பல வழிகளில் தகவல்களைச் சேகரித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
7 வருட ஜெயில் மற்றும் அபராதம்
இந்நிலையில் புதிய பினாமி சட்டத்தின் கீழ் ஒருவரின் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அதிகப்படியாக 7 வருட ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.