இந்திய வர்த்தகச் சந்தையின் ஏற்றுமதி கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக அக்டோபர் மாதத்தில் சரிந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் வரித் திரும்பப்பெறுதலில் ஏற்பட்ட காலத் தாமதத்தினால் ஏற்றுமதி சந்தையில் பணப்புழக்கம் அதிகளவில் குறைந்தது.
இதன் வாயிலாகவே அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவீடுகள் குறைந்துள்ளது.
ஏற்றுமதி சரிவு
அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவீடுகளை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஏற்றுமதி அளவு 1.1 சதவீதம் சரிந்து 23.1 பில்லியன் டாலரும், இறக்குமதி அளவு தொடர்ந்து 10 மாதங்களாக உயர்ந்து அக்டோபர் மாதத்தில் 7.6 சதவீதம் உயர்ந்து 37.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அக்டோபர் மாதத்திற்கான வர்த்தகப் பற்றாக்குறை 14 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பணப்புழக்கம் பிரச்சனை
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் வரிதிரும்பப் பெறுதலில் ஏற்பட்ட தாமதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது மட்டும் அல்லாலமல் பணப்புழக்கம் இல்லாமல் தவிக்கவிட்டது.
இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களின் வாயிலாகவே ஏற்றுமதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் வரியைச் செலுத்துவதும் சரி, அதனைத் திரும்பப் பெறுவதும் சரி மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது வர்த்தக முறைக்கும் சற்று கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
7 மாதம்
இந்நிலையில் 2017ஆம் நிதியாண்டின் முதல் 7 மாதத்தில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை 31 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது 35 மாத உயர்வான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பற்றாக்குறை
ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு மதிப்பு மத்தியில் இருக்கும் இடைவெளியே வர்த்தகப் பற்றைக்குறை எனக் குறிப்பிடப்படுகிறது.