இந்திய ஈகாமர்ஸ் மற்றும் வேலெட் சேவையில் வேகமாக வளர்ந்து வரும் பேடிஎம், தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிப்பதைப் போலக் கடன் வழங்குகிறது. அதுவும் வட்டியில்லாமல்.
பேடிஎம் அறிவித்துள்ள இத்திட்டத்தின் மூலம் ஒருவர் தினமும் கூடக் கடன் வாங்கலாம்.
புதிய கூட்டணி
இந்தியாவின் முன்னணி பேமெண்ட்ஸ் தளமான பேடிஎம், மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ ஆகியவை இணைந்து பேடிஎம்-ஐசிஐசிஐ பாங்க் போஸ்ட்பெய்டு என்ற புதிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
வட்டியில்லாகக் கடன்
இப்புதிய கூட்டணியில் அறிவித்துள்ள திட்டத்தின் வாயிலாகப் பேடிஎம் செயலி மூலம் முதல்கட்டமாக ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு, குறுகிய கால அளவிற்கு வட்டியில்லா கடன் அளிக்க உள்ளது.
இந்தப் பணத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடி கடன்
தினசரி செலவுகளுக்கு, திரைப்பட டிக்கெட், விமானப் பயண டிக்கெட், ஷாப்பிங் போன்ற பணிகளுக்காகச் சிறு தொகையைக் குறுகிய காலத்திற்குக் கடன் அளிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை வர்த்தகக் கோட்பாடாக வைத்துள்ளது இக்கூட்டணி.
மேலும் இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பம் செய்யப்பட்ட உடனேயே பணம் பரிமாற்றம் செய்யப்படும் எனவும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
எவ்வளவு பணம் கிடைக்கும்..?
வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரை மையமாக வைத்து, 45 நாட்கள் காலக் கெடுவுடன் வட்டியில்லாமல் 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான கடன் அளிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் முறையாகக் கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம் இந்தக் கடன் அளவீடு 20,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் எனப் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கணக்கு
இக்கூட்டணியில் உருவாக்கியுள்ள புதிய வர்த்தக அமைப்பில் கடனுக்காக விண்ணப்பம் செய்யும் போதே வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கிரெடிட் கணக்குத் திறக்கப்படும்.
வங்கி செயல்பாடுகள்
பேடிஎம் தளத்தில் அளிக்கப்படும் இந்தச் சேவைகள் வங்கிகளில் இயங்கக்கூடிய இருப்பு நிலை குறித்த தொடர் புதுப்பிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதற்கான தொழில்நுட்பத்தைக் கொண்டு பேடிஎம் இப்புதிய கடன் அளிக்கும் தளத்தை உருவாக்கியுள்ளது.
முதற்கட்ட திட்டம்
இத்திட்டத்தின் துவக்கமாக ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சேவையைப் பேடிஎம் ஆப் மூலம் வழங்குகிறது. இன்னும் சில நாட்களில் இது ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இக்கூட்டணி முடிவு செய்துள்ளது.
பில்...
இப்புதிய சேவையில் கடன் அளவை ஒரு வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பின் பணம் டிஜிட்டல் கணக்கில் வைப்புச் செய்யப்படும். வைப்புச் செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அடுத்த மாதத்தின் முதல் நாளில் கிரெட்டி பில் வாடிக்கையாளர்களிடம் சேரும், பில் வந்த 15 நாட்களில் பணம் செலுத்தப்பட வேண்டும்.
இந்தப் பணத்தை வாடிக்கையாளர் பேடிஎம் வாலெட், டெபிட்கார்டு அல்லது இண்டர்நெட் பாங்கிங் என எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
வர்த்தக வாய்ப்பு
இன்று பலரும் கிரெட்டி கார்டு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள், அதேபோல் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இணையத்தில் ஷாப்பிங் செய்கின்றனர்.
இந்த இரு பிரிவினரையும் குறிவைத்தே இப்புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் அவரச நிதி தேவை உடையோருக்கும் இந்தத் திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கும் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
பிற நிறுவனங்கள்
இதுபோன்ற சேவையை அளிப்பதில் பேடிஎம் முதல் நிறுவனம் இல்லை, மொபிகிவிக், பஜாஜ் பைனான்ஸ் உடன் இணைந்து இதேபோன்ற சேவையை அளிக்கிறது.
அதேபோல் ePayLater இதேபோன்ற சேவையை அளித்துச் சுமார் 20 லட்ச வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. ஆனால் பேடிஎம் நிறுவனத்திடம் கிரெடிட் செய்யப்படும் பணத்தைப் பயன்படுத்தவதற்காகச் சேவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.
இது பேடிஎம் நிறுவனத்தின் வர்த்தகத்திற்குப் பெரிய அளவில் கைகொடுக்கும்.
கிரெடிட் கார்டு
கடன் வலையில் சிக்கிக்கொள்ளப் பயப்படுவோர் பெரும்பாலும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை, ஆனால் மாத கடைசியிலோ அல்லது அவசர தேவையின் போது பணமில்லாமல் திண்ணாடுகின்றனர். இவர்களுக்குப் பேடிஎம்-ஐசிஐசிஐ வங்கி அளிக்கும் இப்புதிய சேவை பெரிய அளவில் உதவும்.
இது இருதரப்புக்கும் பெரிய அளவிலான வாய்ப்புகள் உருவாக்கும்.
வட்டி
45 நாட்களுக்கு மட்டுமே வட்டியில்லா கடன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின் இதன் மீதான வட்டி எவ்வளவு என்பது சற்று கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
வங்கி வட்டி விகிதம்
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கு 45-50 நாட்கள் வரையில் வட்டி விதிக்கப்படுவதில்லை. வங்கிகளைக் காட்டிலும் குறைவான வட்டியில் பேடிஎம் கடன் அளித்தால் அவசர தேவையில் இருக்கும் மக்களுக்கு இது ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும்.
மூடுவிழா
இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற திட்டங்களைப் பிற வங்கிகளும் கையாண்டால், அடுத்தச் சில வருடத்தில் கிரெடிட் கார்டு என்ற ஒன்றே இருக்காது.
ஏற்கனவே ஆப்பிள் பே, சாம்சங் பே மூலம் உயர்மட்ட மக்கள் மத்தியில் டெபிட் கார்டு பயன்பாடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.