அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி அளவீகள் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டில் இதே காலாண்டில் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதம் அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுவே ஜூன் காலாண்டில் இதன் அளவு 5.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
5 காலாண்டுகள்
கடந்த 5 காலாண்டுகளாக நாட்டின ஜிடிபி தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தொடர் சரிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செப்டம்பர் காலாண்டில் உயர்வான நிலையைச் சந்தித்துள்ளது.
ஜூன் காலாண்டில் ஜிடிபி 5.7 சதவீதம் வரையில் குறைந்து காணப்பட்ட நிலையில், செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு 6.3 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
விவசாயம்
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சி மிகவும் மோசான நிலையில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலாண்டில் 2.3 சதவீதமும், 2016 செப்டம்பர் காலாண்டில் 4.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை மற்றும் கட்டுமானம்
ஜூன் காலாண்டில் தொழிற்துறை மற்றும் கட்டுமானம் துறையின் வளர்ச்சி 1.6 சதவீதமாக இருந்தபோது செப்டம்பர் காலாண்டில் இதன் வளர்ச்சி 5.8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உற்பத்தி
நாட்டின் ஜிடிபியின் பெரிய பங்கு வகிக்கும் உற்பத்தித் துறை இக்காலாண்டில் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நம்பிக்கை அளிக்கும் காரணியாக அமைந்துள்ளது.
ஜூன் காலாண்டில் இதன் அளவு 1.2 சதவீதமாக மட்டுமே இருந்தது.
சேவைத்துறை
ஜூன் காலாண்டில் 8.72 சதவீதமாக இருந்த சேவைத்துறையின் வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதம் அளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.