டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்துவதும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இந்திய வங்கிகள் ஒரு பக்கம் ஏடிஎம் மையங்களை மூடி வரும் அதே நேரத்தில் வெளிநாட்டு வங்கிகளும் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை மூடி வருகின்றன.
2014-2017 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 18 சதவீதம் வரை வெளிநாட்டு வங்கி ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளதாக ஆரிபிஐ வங்கி தரவு கூறுகிறது.
வெளிநாட்டு வங்கி ஏடிஎம்
சென்ற ஆண்டுச் செப்டம்பர் காலாண்டில் 994 ஏடிஎம் மையங்கள் வெளிநாட்டு வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது தற்போது 2017 செப்டம்பர் காலாண்டில் 934- ஆகக் குறைந்துள்ளது.
மூடப்படும் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை
இதுவே 2014 செப்டம்பர் காலாண்டில் 1,141 ஏடிஎம் மையங்களை இந்தியாவில் வெளிநாட்டு வங்கிகள் அமைத்து இருந்தன. இங்கிலாந்தின் ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவின் ஃபர்ஸ்ட் ரேன் வங்கி போன்றவையும் ஏடிஎம் மையங்களை மூடியுள்ளன. இந்தியாவில் அதிக வங்கி கிளைகளை வைத்து இருக்கும் வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்டு சாட்டர்டு, சிட்டி வங்கி மற்றும் எச்எஸ்பிசி ஆகியவையும் ஏடிஎம் மையங்களை மூடி வருகின்றன.
முக்கிய வெளிநாட்டு ஏடிஎம் வங்கிகளின் எண்ணிக்கை
ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கிக்கு 2014-ம் ஆண்டு 279 ஏடிஎம் மையங்கள் இந்தியாவில் இருந்தன. தற்போது இதுவே 223 ஆகக் குறைந்துள்ளது. சிட்டி வங்கியில் 577 ஆக இருந்த ஏடிஎம் மையங்கள் 549 ஆகவும், எச்எஸ்பிசி வங்கியில் 143 ஆக இருந்த ஏடிஎம் மையங்கள் 100 ஆகவும் குறைந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள்
2014-ம் ஆண்டு இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் 1,20,000 ஆக இருந்து ஏடிஎம் மையங்கள் 2017- ஆண்டு 1,40,000 ஆக உள்ளது. ஆனால் கடந்த சில காலாண்டாக இவர்களும் ஏடிஎம் மையங்களைக் குறைத்து வருவது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
தனியார் துறை வங்கிகள்
பொதுத் துறை வங்கிகள் போன்று 2014-ம் ஆண்டு 50,000 ஆக இருந்த தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் 59,365 ஆக இருப்பினும் கடந்த சில காலாண்டாக ஏடிஎம் மையங்களை மூடி வருகின்றன.