அமெரிக்கச் சந்தைக்குப் போட்டியாக வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெயை அதிகளவில் உற்பத்தி செய்து வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வந்த காரணத்தால் கடந்த 2 வருடத்தில் இதன் விலை மளமளவெனச் சரிந்தது. இதன் காரணமாக ஏப்ரல் 2016இல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 38.99 டாலர் என்ற குறைவான விலையை அடைந்தது.
இந்நிலையில் வளைகுடா நாடுகள் அதிகளவிலான வருமானத்தை இழந்து நிதிநெருக்கடியில் சிக்கியது. தற்போது நிதி தேவைக்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் இதன் விலையை மீண்டும் உயர துவங்கியுள்ளது.
2 வருட உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 65.54 டாலர் வரையில் உயர்ந்து 2 வருட உயர்வை அடைந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வருமானத்தைப் பெறும். ஆனால் இந்தியாவில்...
இந்தியா
கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.
வரி..
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி இதன் லாபத்தை மக்களுக்கு அளிக்காமல் அதிக வருவாய்ப் பெற்றது.
தற்போது சர்வதேச சந்தையிலேயே விலை உயர்ந்த காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
தட்டுப்பாடு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதால், சந்தையில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வருகிறது.
ஆராம்கோ
OPEC அமைப்பில் இருக்கும் முக்கியமான உற்பத்தி நாடான சவுதி அரசின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ பங்குச்சந்தையில் குதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 100 பில்லியன் டாலர் வரையிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் தனது இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.