வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் இருக்கும் வங்கிகளும் அதிகளவிலான தொழில்நுட்பகளைப் பயன்படுத்தி ஊழியர்களை எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. இத்தகைய நிலை தற்போது தனியார் நிறுவனங்களில் அதிகமாக இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனங்களிலும் கூடிய விரைவில் வரும்.
இதன் மூலம் வங்கித்துறையில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் பேர் வெளியேற்றப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இவர்களுக்கு அதிகளவிலான வரிப் பயன்கள் இருக்கும் காரணத்தாலும் வங்கி சேவை பெறும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக வழியை அமைக்கத் திட்டமிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
70வயது முதியோர்
இந்நிலையில் 70 வயது முதியோர்கள் அனைவருக்கும் வங்கிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று அவர்களுக்கான சேவையை அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதனை அனைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் கட்டாயப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
வேலைக்கு உத்தரவாதம்..
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கிகள், இந்தச் சேவையை நடைமுறைப்படுத்த புதிய ஊழியர்களையும், அவர்களுக்கான திறன் தேவையையும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பணிநீக்கம்
இதனால் வங்கி நிர்வாகம் தற்போது வங்கி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் இப்புதிய சேவையில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைக்கும்.
பந்தன் வங்கி
இந்தியாவில் புதிதாக வங்கி சேவையைத் துவங்கியுள்ள பந்தன் வங்கி தற்போது 501 கிளைகளில், 2,022 டோர்ஸ்டெப் சேவை மையங்களை வைத்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கையை 2,547 மையங்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இச்சேவைக்காக 2017-18ஆம் ஆண்டில் 5,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
ஐடிஎப்சி வங்கி
பந்தன் வங்கியைப் போலவே ஐடிஎப்சி வங்கியும் தற்போது இந்தியாவில் சுமார் 7,000 இடங்களில் டோர் ஸ்டெப் சேவையை அளித்து வருகிறது.