மும்பை: ரிசர்வ் வங்கியின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்துக் கடனையும் செலுத்திவிட்டு கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை மாற்றப் பல முக்கிய முடிவுகளை அனில் அம்பானியின் தலைமையிலான ஆர்காம் நிறுவனம் எடுத்துள்ள நிலையில் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு நாட்களில் 50 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
ஆர்காம் எடுத்துள்ள புதிய முடிவினை அடுத்து மொத்த கடன் மதிப்பில் 85 சதவீதம் வரை சரிந்து வெறும் 6000 கோடி ரூபாய் மட்டுமே கடன் இருக்கும்.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தையில் செவ்வாய்க்கிழமை முடிவில் 30 சதவீத லாபத்தினை ஆர்காம் நிறுவனம் அளித்தது. இன்று புதன்கிழமை பிற்பகல் 12:07 மணி நிலவரத்தின் படி 23.53 சதவீதம் வரை ஆர்காம் நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து ஒரு பங்கின் விலை 26.35 ரூபாயாக உள்ளது.
சொத்துக்கள் விற்பனை
ஆர்காம் நிறுவனம் அதன் டெலிகாம் சொத்துக்களான ஸ்பெக்டர்ம், டவர் மற்றும் ஃபைபர் சேவைகளை 2018 மார்ச் மாதத்திற்குள் விற்று 25,000 கோடி ரூபாயினைச் செலுத்த முடிவு செய்துள்ளது என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீன வங்கியிடம் இருந்து பெற்ற கடன் அனைத்தும் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
திருபாய் அம்பானி சிட்டி
பின்னர் ஆர்காம் கட்டுப்பாட்டில் உள்ள திருபாய் அம்பானி சிட்டி மற்றும் பிற சொத்துக்களை விற்று மீதம் உள்ள 14,000 கோடி ரூபாயினை அடைக்க முடிவு எடுத்துள்ளது. இதன் முடிவில் ஆர்காம் வசம் 6,000 கோடி ரூபாய் மட்டுமே கடன் இருக்கும்.
ஜியோ
அனில் அம்பானியின் இந்த முடிவை வைத்துப் பார்க்கும் போது ஆர்காம் நிறுவனம் டெலிகாம் வணிகத்தினை விட்டு முழுமையாக வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது. ஆர்காம் நிறுவனத்தின் ஸ்பெக்டர்ம்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளது.