இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களும் 200 ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்கும் படி மாற்றம் வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக இந்திய வங்கித் துறை கூடுதலாக 110 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளனர். புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட போது தான் வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கச் செலவு செய்தன. தற்போது ஆர்பிஐ வங்கி உத்தரவால் மீண்டும் வங்கிகளுக்குச் செலவு அதிகரிக்க உள்ளது.
200 ரூபாய் நோட்டு வெளிவந்து 6 மாதங்கள் ஆன பிறகும் பொது மக்கள் இடையில் அதிகளவில் புழுக்கத்தில் வரவில்லை. இவை அதிகம் வந்தால் தான் சில்லறை தட்டுப்பாடுகள் குறையும் என்றாலும் வங்கிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவானது யார் தலையில் விழும் என்பது தான் கேள்வியாக உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களை மாற்றி அமைக்க 6 மாதம் காலம் தேவைப்படும். குறைந்தபட்சம் ஒரு ஏடிஎம் இயந்திரத்திற்கு 5,000 ரூபாய் வரை செலவு ஆகும்.
இந்தப் பணிகளுக்காக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் அளவை பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையின் போது எப்படி 2000 ரூபாய் எனக் குறைத்து பின்பு அதிகரிக்கப்பட்டதோ அதேபோன்ற நிலை வரவும் வாய்ப்புகள் உள்ளது என ஆர்பிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.