உலகில் எந்தொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு விமானப் பயணிகளின் வளர்ச்சி விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் தங்களது கட்டணத்தைக் குறைத்து மலிவான விலையில் விமானப் பயணத்தை அளித்த காரணத்தால் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.
ஆனால் இப்போது விமானக் கட்டணங்கள் சுமார் 13 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஜிஎஸ்டி.
விலை உயர்விற்கான காரணம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக விமான எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வாயிலாக விமானச் செயல்பாடுகளின் (Operations) கட்டணமும் அதிகரித்துள்ளது, இதனால் விமான நிறுவனங்கள் தங்களது விமானக் கட்டணத்தை 13 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது
செலவுகள் உயர்வு..
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் பயணிகள் விமானச் சேவையில் செயல்பாடுகளுக்கான செலவுகள் சுமார் 27 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் விமான எரிபொருள் தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் இல்லாத காரணத்தால் இதில் ஏற்பட்டுள்ள செலவுகளின் அளவு சற்று குறைவாக உள்ளது என விமான நிறுவனங்களின் தரப்பு தெரிவித்துள்ளது.
பின்னடைவு
இந்தியாவில் மலிவான விமானக் கட்டணங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஈர்த்தது. இதனால் 2016-2017ஆம் ஆண்டில் விமானச் சேவையிலும் வர்த்தகத்திலும் உலகின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கியது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் அடுத்தச் சில வாரங்களில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
கட்டணங்கள் உயர்வு
விமான நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க விமானப் பயணக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சேவையில் ஏற்பட்ட விலை உயர்வு ஆகியவையே தற்போது பயணிகள் விமானக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார்.
விமான எரிபொருள்
பயணிகள் விமானச் சேவையில் அதிகளவிலான செலவுகள் விமான எரிபொருளுக்கான செலவிடப்படுகிறது. இந்நிலையில் விமான ஏரிபொருளை ஜிஎஸ்டி அமைப்பில் சேர்ப்பதன் மூலம் விமான நிறுவனங்கள் இன்புட் டாக்ஸ் கிரெடிட் சேவையைப் பெற முடியும். இதனால் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்களும் கட்டுக்குள் வைக்க முடியும் இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.