இந்திய ஐடி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில், அமெரிக்க அரசின் அறிவிப்பால் மீண்டும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் பணீநிக்கம் துவங்கியுள்ளது. இதனால் இத்துறை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்க வாடிக்கையாளர்களை விட்டுவிடக்கூடாது என்று அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகளை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டு இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தியது, இதனால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுக்கான சம்பளம், சம்பள உயர்வும் குறைக்கப்பட்டது.
தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அளவிற்கு நெருக்கடியை அமெரிக்காவின் அறிவிப்பு உருவாக்கியுள்ளது.
வீசா காலம் நீட்டிப்பு
டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்கக் குடியுரிமையான கீரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விண்ணப்பம் ஒப்புதல் பெறும் வரையிலான காலத்திற்கு விசா காலம் நீட்டிப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பல ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் வசிக்கக் கூடுதலான கால அளவைப் பெற்று வருகின்றனர்.
தடை...
இந்த விசா கால நீட்டிப்பை உடனடியாகவும் தடை செய்ய டிரம்ப் அரசு அமெரிக்காவின் ஹோம்லேன்டு செக்யூரிட்டிக்கு மெமோ அளித்தது. இது தற்போது நடைமுறைக்கு வராத நிலையிலேயே இந்திய ஐடி நிறுவனங்கள் ஆடிப்போய் நிற்கிறது. பொதுவாக டிரம்ப் அரசு விசா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எவ்வளவு தடை வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவே இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் அச்சத்திற்கான முக்கியக் காரணம்.
75,000 இந்தியர்கள்
டிரம்ப் அரசின் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் இருக்கும் சுமார் 75,000 இந்தியர்கள் (75,000 குடும்பங்கள்) தாய் நாட்டிற்குத் திரும்பும் நிலை உருவாகும்.
5 லட்சம் இந்தியர்கள்
அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் சுமார் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கிரீன் கார்டிற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இப்புதிய அறிவிப்பில் துணை தலைவர் மற்றும் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம்
அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றப்படும் காரணத்தால், இந்தியாவில் அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பதன் கட்டாயத்திற்காகத் தற்போது இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது.
முக்கிய நகரங்கள்
இதன் காரணமாகப் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரத்தில் இருக்கும் சில முக்கிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது அறிவித்துள்ள பணிநீக்கம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் தாக்கம் என்றும் கூறப்படுகிறது.
டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ்
2015ஆம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் மற்றும் இண்போசிஸ் இணைந்து சுமார் 7,504 ஹெச்1பி விசாக்களைப் பெற்றுள்ளது. இது மொத்த விசா வழங்கும் எண்ணிக்கையில் 8.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
60 நாள்
மேலும் வருடாந்திர திறன் ஆய்வுகள் தற்போது ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறைவான திறன் கொண்ட ஊழியர்களை வெளியேற்றுவதைத் தாண்டி இந்த வருடம் ஆவ்ரேஜ் பிரிவில் இருக்கும் ஊழியர்களையும் 60 நாட்கள் நோட்டீஸ் காலம் அளிக்கப்பட்டு ஐடி நிறுவனங்கள் வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது எனத் தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் சுதீப் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள்
ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அந்நாட்டு ஊழியர்களையே பணியில் அமர்த்தி வரும் நிலையில், ஹெச்1பி விசாவில் வேலை செய்து வரும் இந்தியர்களைத் திரும்ப வர அறிவுறுத்தியுள்ளது.
சம்பள கட்டுப்பாடுகள்
தற்போது ஒரு அமெரிக்க நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ஊழியரை நிறுவன பணியில் அமர்த்த வேண்டும் என்றால், குறைந்தபட்ச சம்பளமாக 60,000-80,000 டாலரை வரையிலான சம்பளம் பெற வேண்டும்.
டிரம்ப் அரசு விதித்த கட்டுப்பாடுகளில் மூலம் இதன் அளவு 1.30 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுவும் ஒரு காரணம்
இந்த வருடம் திறன் ஆய்வில் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய விசா கட்டுப்பாடுகள் விடக் குறைந்தபட்ச சம்பள அளவு அமெரிக்காவில் உயர்த்தப்பட்டதால் இந்தியாவில் ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.