சென்னை: மத்திய அரசு ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தினைத் தனியார் மயமாக்கும் வேலையில் தீவரமாக இறங்கியுள்ளது.
ஒரு பக்கம் டாடா குழுமம் மீண்டும் ஏர் இந்தியாவைத் தன்வசம் கொண்டு செல்லும் அதே நேரம் இதில் அரசுக்குச் சொற்பமான பங்குகள் இருக்கும். இந்தியாவின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக ஏர் இந்தியா தொடர்ந்து இருக்கும் என்றும் ஒருபக்கம் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஊழியர்களின் நிலை என்ன என்பது தான் தற்போதைய விவாதமாக உள்ளது.
ஊழியர்கள்
தற்போது இந்தியாவின் பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமாக உள்ள ஏர் இந்தியாவில் 29,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர்.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா தரப்பில் விசாரித்த போது குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களைப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்ற இருப்பதாகவும், ஒப்பந்த ஊழியர்கள் டாடா குழும ஊழியர்களாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
அரசு என்ன செய்யப்போகிறது?
பிற துறைகளில் வேலை வாய்ப்புகளை அரசு அளிக்க முடிவு செய்தது மட்டும் இல்லாமல் விருப்ப ஓய்வு பெற்று செல்வதற்காகப் பேக்கேஜ்களையும் ஏர் இந்தியா அறிவிக்க உள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு முதலீடு
அதே நேரம் கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் 49 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீடுகளைப் பெறும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமானப் போக்குவரத்துத் துறை
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம் இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் விசாரித்த போது விஆர்எஸ், பொதுத் துறையில் வேலை எனப் பல்வேறு விதமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதில் ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் ஆர்.என். சௌபே கூறினார்.