இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு எல்லா விஷயத்திலும் ஒரு படி மேல் என்றால் நாம் மறுக்க முடியாது. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் திராவிட கட்சிகள் ஆரம்ப கட்டத்தில் அறிவித்த திட்டங்களும், அவற்றை செயல்படுத்திய முறையும் தான். இன்றளவும் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.
தற்போது மத்திய அரசே தமிழ்நாட்டில் இருக்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு காப்பி அடித்து மிகப்பெரிய திட்டமாக அறிவிக்க உள்ளது.
NATHEALTH அமைப்பு
மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் சுகாதாரக் காப்பீடு கட்டாயம் வழங்க வேண்டும், மேலும் சுகாதாரத் துறையை முக்கியமான துறையாகக் கொண்டு இயங்க வேண்டும் என இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான 'NATHEALTH' வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் நிதி
இதற்காகத் தனிப்பட்ட முறையில் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது. இப்படி ஒதுக்கப்படும் நிதியை மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பையும், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மக்களுக்குப் பலன்
இந்தக் கோரிக்கையை மத்திய அரசு மிக முக்கியமானதாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதே மக்களுக்குப் பலன் அளிக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக அமைந்துள்ளது.
புள்ளிவிவரம்
இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மீதமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்கின்றனர்.
இதனை மத்திய அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என NATHEALTH அமைப்பு தெரிவித்துள்ளது.
முக்கியக் காரணம்
இந்தியாவில் ஆயுள் காப்பீடு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது போலச் சுகாதாரக் காப்பீடு பிரபலம் அடையவில்லை என்ற சொல்ல வேண்டும், இதனை உடனடியாக அரசு கையில் எடுக்கும் பட்சத்தில் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
பட்ஜெட் ஆய்வுகள்
பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, தற்போது வாழ்வியல் முறையில் மக்களுக்குச் சுகாதாரத் துறையின் அவசியம் மற்றும் காப்பீட்டின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் ஹெல்த் இன்சூர்ன்ஸ் வழங்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை மத்திய அரசிடம் வைக்கப்பட்டு உள்ளது.
மோடி அரசு
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் மோடி தலைமையிலான அரசு தற்போது 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் வெற்றியை மையமாக வைத்து 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ்-ஐ மையமாக வைத்து மிகப்பெரிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.
நிதி ஒதுக்கீடு
பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் இருந்து கிடைத்த தகவல்கள் படி, மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு வழங்க சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.
எதிர்பார்ப்பு
இதுக்குறித்து எவ்விதமான உறுதிப்படுத்தப்பட்ட அரசு அறிவிப்புகள் வெளிவராத நிலையில் 5,000 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டை பட்ஜெட் எதிர்பார்ப்புகளாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மை காத்துக்கிடக்கிறது.
மேலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை Centrally Sponsored Scheme திட்டத்தின் கீழ் வைக்கப்படும்.
செலவீடுகள்
மக்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் மொத்த செலவில் 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீத தொகையை மத்திய அரசும் அளிக்கும் எனவும் தகவல்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
5 லட்சம் ரூபாய் வரையில்
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு அளிக்கப்படும் நிலையில், எவ்வளவு தொகைக்கு இந்தக் காப்பீடு வழங்கப்படும் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
3 வகையான திட்டம்
அனைவருக்குமான இந்தச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் 3 வகையான திட்டம் இருக்கும் எனவும் தெரிகிறது.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
மத்திய அரசு 2016ஆம் ஆண்டில் Pradhan Mantri Suraksha Bima Yojna பெயரில் நாட்டு மக்கள் அனைவருக்குமான விபத்து காப்பீடும், அதேபோல் ஆயுள் காப்பீடாக Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojna திட்டமும், பென்ஷன் திட்டமாக Atal Pension Yojana திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரக் காப்பீட்டு
இந்நிலையில் தற்போது சுகாதாரக் காப்பீட்டையும் வழங்க உள்ளது. இறுதி முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் பிப்ரவரி 1ஆம் தேதி தெரியும்.