மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களின் விற்பனையைக் குறைந்து இந்தியாவிலேயே இதனைத் தயாரிக்க வைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த உள்ளது.
இந்த வரி உயர்வின் மூலம் ஹைய் என்டு அதாவது அதிக விலை மதிப்புடைய போன்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்க வரி
இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சீனா, கொரியா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட உள்ளது. சமீபத்தில் கூடச் சுங்க வரி அதிகரிப்பால் ஆப்பிள் ஐரோன் விலை கடுமையாக உயர்ந்தது.
உதிரிப் பாகங்கள்
தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்குச் சுங்க வரி இல்லாத பொருட்களான பிரின்டெட் சர்கியூட் போர்டு, கேமெரகள் மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்திய தொழிற்சாலையில் அதனை இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வரி விதிப்பு
இந்நிலையில் தற்போது வரி இல்லாமல் இருக்கும் இந்தப் பொருட்களுக்குப் பட்ஜெட் அறிக்கையில் சுங்க வரி விதிப்பு அமலாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் போன்களும் இந்த வரி விதிப்பால் விலை உயரும் அபாயம் ஏற்பட உள்ளது.
குறைவான வரி
பொதுவாக முழுமை பெற்ற ஒரு பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிகளவிலான வரி விதிக்கப்படுகிறது, அதேபோல் அதே பொருளின் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் போது அதன் வரி குறைவாகவே இருக்கும்.
இதனைப் பயன்படுத்தியே பல முன்னணி நிறுவனங்கள் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது.
முட்டுக்கட்டை
தற்போது அரசு உதிரி பாகங்கள் மீதும் வரி விதிக்கும் நிலையில், நிறுவனங்கள் உதிரி பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியில் இறங்கும் என்பது மத்திய அரசின் கருத்து.
ஜிஎஸ்டி
மறைமுக வரியை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய அரசிடம் இருக்கும் ஓரே ஆயுதம் சுங்க வரி.
இதனைப் பயன்படுத்தியே இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பெரிய அளவில் உருமாற்றம் செய்ய உள்ளது.