ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கை வெளியிடும் முன் வர்த்தகச் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பு இருப்பதைப் போலச் சாமானியர்களுக்கும் தங்களது சேமிப்பை அதிகரிக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் பல்வேறு வகையில் சில அறிவிப்புகள் வருமான என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள இத்தகைய சூழ்நிலையில், ஒரு சமானியனின் பார்வையில் பட்ஜெட் அறிக்கையில் தனக்கான எதிர்பார்ப்புகள் என்ன தெரியுமா..?
வருமான வரித் தளர்வு
பொதுவாக அனைத்துத் தனிநபர் மற்றும் மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கோரிக்கை என்றால் வருமான வரி அளவுகள் தான். இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவீட்டை 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர் வேண்டும் என அதிகப்படியானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்
RERA அமலாக்கம் இந்திய ரியல் எஸ்டேட் துறையை மிகப்பெரிய அளவில் பாதித்தது, அதுமட்டும் அல்லாமல் கட்டுமான நிறுவனங்களுக்குப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இதன் மூலம் சாமானியர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கடன் அளவீடுகள் மற்றும் தவணை தொகையைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றில் பல்வேறு தடைகள் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
இதற்குப் பட்ஜெட்டில் தீர்வு காணப்பட்டால் பல நன்மைகள் உருவாகும் என அறியப்படுகிறது.
1.5 லட்சம் ரூபாய்
தற்போது 80சி வருமான வரி சட்டத்தின் கீழ் அதாவது, பிஎப், பிபிஎப், இன்சூரன்ஸ், என்எஸ்சி போன்ற திட்ட முதலீடுகள் மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை வரை வரில சுலுகை உண்டு.
வைப்பு நிதி மீதான வட்டி வருமானம் அதிகளவில் குறைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் 1.5 லட்சம் ரூபாய் அளவீட்டை உயர்த்த வேண்டும் என 90 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவச் செலவு
2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் மருத்துவச் செலவுகள் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவச் செலவிற்கு அளிக்கப்படும் 15,000 ரூபாய் வரி சலுகையை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பிஎஸ்
தற்போது என்பிஎஸ் திட்ட முதலீட்டுக்கு 80சிசிடி(1) கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படும் நிலையில், இதனை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் எனவும் சில தரப்பினர் கூறியுள்ளனர்.
கிராஜூவிட்டி
ஒரு நிறுவனத்தில் 5 வருடத்திற்கு அதிகமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டும் கிராஜூவிட்டி தொகைக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் வரி இல்லை, இதன் அளவீட்டை 20 லட்சம் வரையில் உயர்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்துச் சேவைகளின் கட்டணம் அதிகரித்துள்ளது, இதனால் சில முக்கியமான சேவைகள் அதாவது இன்சூரன்ஸ், கல்வி, போக்குவரத்து மற்றும் இதர அடிப்படை சேவைகளின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதான் மக்களின் கோரிக்கை.. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதேனும் கோரிக்கை உள்ளது என்றால் கருத்து பதிவிடும் தளத்தில் பதிவிடலாம்.