நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பொது வேலைவாய்ப்புச் சந்தையில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் வழக்கத்தை 2013ஆம் ஆண்டு முதல் துவங்கியது.
அன்று முதல் எப்போது அறிவிக்காத வகையில், எஸ்பிஐ வங்கி சுமார் 9,500 பேரைப் புதிதாக வங்கியில் பணியில் அமர்த்த உள்ளதாகத் தற்போது அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி
உலகச் சந்தையில் எஸ்பிஐ வங்கி முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தனது கிளைகளை அலுவலகங்களை ஒன்றாக இணைத்துத் தற்போது நாடு முழுவதும் ஒற்றை வங்கியாக இயங்கி வருகிறது.
இந்த இணைப்புப் பணியில் போது, அதாவது நடப்பு நிதியாண்டில் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம், வீஆர்எஸ் எனப் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது எஸ்பிஐ நிர்வாகம்.
9,500 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை பிரிவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இப்பிரிவில் மட்டும் சுமார் 9,500 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடத்தில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா முழுவதும்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9,500 வேலைவாய்ப்புகள் பிராந்தித்தை மையமாகக் கொள்ளாமல் இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளையில் இப்புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை
மேலும் இவ்வங்கியில் டிஜிட்டல் சேவையின் அளவும் எண்ணிக்கையும் நாளுக்க நாள் அதிகரித்து வரும் நிலையில் நிர்வாகப் பிரிவில் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகும் இடத்தில் அதிக ஊழியர்களை நியமிக்கும் மறுசீரமைப்புப் பணியில் எஸ்பிஐ வங்கி இறங்கியுள்ளது.
மொத்த ஊழியர்கள்
செப்டம்பர் 2017 முடிவில் எஸ்பிஐ வங்கியின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,69,219ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இதன் அளவு 2,79,803 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.