நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் 50 சதவீத வருவாய் மற்றும் வர்த்தகத்தை அமெரிக்காவில் இருந்துமட்டுமே பெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றிய நாள் முதல் அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனங்களுக்கு அதிகக் கார்பரேட் டாக்ஸ், ஹெச்1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடு, ஹெச்1பி விசா கால நீட்டிப்பில் கடுமையான நிர்பந்தம் எனத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வந்த காரணமாக அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிறுவனத்தில் அமெரிக்க ஊழியர்களைப் பணியில்அமர்த்தியது.
இதில் விப்ரோ நிறுவனம் பிற இந்திய நிறுவனங்களை விடவும் அதிகமான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது, இதன் காரணமாக விப்ரோ நிறுவனம் அதிகளவிலான பலனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
விப்ரோ
இந்தியாவின் 3வது மிகப்பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ அமெரிக்க வர்த்தகத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை அமெரிக்கர்களை நியமித்துள்ளது.
அதிக வர்த்தகம்
அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களை நியமித்துள்ள காரணமாக விப்ரோ நிறுவனம் தற்போது இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களைக் காட்டிலும் அதிகளவிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களை அதிகமான பணியில் அமர்த்தப்படுவதன் மூலம் அதிகளவிலான வர்த்தகம் கிடைக்கிறது என்பதை விப்ரோ காட்டியுள்ளது.
இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்
அடுத்த 2 வருடத்தில் 10,000 அமெரிக்கர்களைப் பணியல் அமர்த்த உள்ளதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது, அதேபோல் டிசிஎஸ் நிறுவனமும் அமெரிக்க ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்துவோம் எனக் கூறியுள்ளது.
ஆனால் விப்ரோ ஒரு படிக்கு மேலே சென்று அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவனத்தின் மொத்த வேலைவாய்ப்புகளில் 50 சதவீத்தை அமெரிக்கர்களுக்குக் கொடுத்துள்ளது.
அபித் அலி நீமுச்வாலா
அதிகளவிலான அமெரிக்கர்களை நியமித்ததன் மூலம் அமெரிக்காவில் புதிய துறையில், புதிய இடங்களில் வர்த்தகம் கிடைத்துள்ளது. இதில் பெரும்பாலானவை குறைந்த காலகட்டம் கொண்டு இருந்தாலும் திட்டங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது என விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அபித் அலி நீமுச்வாலா தெரிவித்துள்ளார்.
வருவாய்
தற்போது விப்ரோ நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டின் மொத்த வருவாயில் சுமார் 53.1 சதவீதம் அமெரிக்காவில் இருந்து கிடைத்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் காரணமாக லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் ஹெச்1பி விசா வாயிலாக இந்திய ஊழியர்களை வைத்து அதிகளவிலான லாபத்தையும் வர்த்தகத்தையும் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அரசு கட்டுப்பாடுகளால் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்நிறுவன ஊழியர்கள் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.