இந்தியாவின் ஜிடிபி 2015-2016 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக இருந்தது. பின்னர் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்கம் அறிவித்த பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் 6 சதவீதத்திற்கும் குறைவாகச் சரிந்தது. பின்னர் இதுவே 6.75 சதவீதமாக உயர்ந்தது.
இன்று பொருளாதாரச் சர்வே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 6.75 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சியானது 2018-2019 நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டில் பண வீக்கம் அதிகரித்து இருப்பது, கச்சா எண்ணெய் விலை அதிகளவில் உயர்ந்து இருப்பது போன்ற காரணங்களால் நாட்டின் உற்பத்தி பாதித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடைப்பட்ட காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது.
2018-2019 நிதி ஆண்டில் சேவை துறையின் வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், தொழில் துறையின் வளர்ச்சி 4.4 சதவீதமாகவும், விவசாய துறையின் வளர்ச்சி 2.1 சதவீதமாக இருக்கும் என்றும் பொருளாதார சர்வே கணித்துள்ளது.