மத்திய பட்ஜெட் 2018-2019-ல் விவசாயம், கிராமம், சுகாதாரம் மற்றும் கல்வி துறைக்கு அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை முன்னேற்றம் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் கல்வி துறையின் தரத்திற்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 6 புதிய திட்டங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆயுஷ்மன் பாரத் யோஜனா
ஆயுஷ்மன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி இந்திய குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை ஒவ்வொரு ஆண்டும் அளிக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் இது மிகப் பெரிய மருத்து காப்பீடு திட்டம் எனத் தெரிவித்துள்ளனர். தற்போது ராஷ்டிரிய ஸ்வஸ்தயப் பீமா யோஜனா என்ற திட்டம் 30,000 ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை ஏழை இந்திய குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது.
பால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குக் கடன் அட்டை
பால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டினை வழங்க இருப்பதாகவும், இதன் மூலமாக இவர்கள் எளிதாகக் கடன் பெற முடியும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கோபர் தன் யோஜனா
கோபர் தன் யோஜனா கீழ் கால்நடைகளின் சானம் மற்றும் கழிவுகளைப் பயன்படுத்தி உரம், பையோ கேஸ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்த உதவும் திட்டமாக அறிவித்துள்ளனர்.
தேசிய மூங்கில் மிஷன்
தேசிய மூங்கில் மிஷன் கீழ் வட கிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு 1,290 கோடி ரூபாயினை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தப் புதிய திட்டமானது வட கிழக்கு மாநிலங்களில் மூங்கில் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
ஏகலவ்ய மாடல் ரெசிடன்ஷியல் பள்ளி
இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கிறார்களோ அங்கு எல்லாம் ஏகலவ்ய மாடல் ரெசிடன்ஷியல் பள்ளியினைக் கட்ட 20 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பிடெக் மாணவர்களுக்கான பெல்லோஷிப் திட்டம்
நாடு முழுவதில் இருந்து பிஎச்டி படிக்கும் டாப் 1000 பிடெக் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஐஐடி கல்லூரியில் பெல்லோஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்காக அவர்களுக்கு மதிப்பு தக்க தொகையும் வெகுமதியாகப் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.