இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் தனது பங்கு இருப்பை உயர்த்திக் கொள்வதற்காக 413 மில்லியன் டாலர் (2,650 கோடி ரூபாய்) அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் எங்களது பங்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகச் சிங்டெல் நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் லாங் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் விலை போர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் சேவையின் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது மட்டும் அல்லாமல் இதனால் அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ளது.
இப்புதிய முதலீட்டின் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிங்டெல் பங்கு இருப்பு 1.7 சதவீதம் அதிகரித்து 48.9 சதவீதமாக உயர உள்ளது.